பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

கருத்து ஓட்டப் போக்கே விமர்சனம் ஆகும். இந்த அடிப்படையில் தான் எழுத்து இயங்கும். வெறும் கொடூரமும் சிலாகிப்பும் காட்டி இலக்கியத்தை வளர்த்துவிட முடியாது. இதுவரைய இலக்கிய சரித்திரம் அதை நிரூபித்திருக்கிறது. புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அததுக்காக ஒரு அந்தஸ்து கொண்டு, எந்த ஒரு இலக்கிய வடிவத்தின் ஸ்தானத்தையும் நிரந்தரமாக காப்பாற்றியோ அழித்தோ கொடுத்ததில்லை.

இலக்கிய அபிப்ராயத்தைச் சொல்வதில் நாம் காட்டியுள்ள ஆரம்பம், முதல் எழுத்து நிலையில் தான் இருக்கிறதே தவிர, இரண்டாவது எழுத்துக்குப் போகவில்லை. திட்டவட்டமாக, அடம்பிடித்த பேச்சாக ஒன்றைச் சொல்வதோடு நிறுத்திக்கொண்டு விடும் முறைதான் பெரிதும் வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஒரு இலக்கிய நூலைப் பற்றி அபிப்ராயம் சொல்வதில் பகுப்பு முறையைக் கையாண்டு, விண்டுபார்த்து நயம் காணும் முறை - இன்றைய இலக்கியம் மட்டுமுல்ல, பழமை இலக்கியங்கள் பற்றியும் கூடச் சொல்லலாம் - கையாளப்பட்டதாகச் சொல்ல முடியாது. ஒரு இலக்கிய உருவம் எதனால் நன்றாக இருக்கிறது, இல்லை என்று அந்த நூலில் அமைந்த குணம் குறைகளைக் கொண்டே விளக்கிப்பார்ப்பது தான், நல்லது கெட்டது பிரிக்கவும், சிறப்பு சிறுமை அறியவும் ஏதுவாக இருக்கும். அது மட்டுமல்ல. இலக்கியப் படைப்புக்கான இலக்கண லக்ஷண மரபு, மூன்று காலத்தையும் ஊடுருவிச் செல்லும் இழையோட்டமாக நீண்டு செல்வதையும் பார்க்கமுடியும்.

இந்த விதமான கருத்துக்களைச் சொல்ல வருவதில் கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்யும் என்பதை புதிதாகச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எழுத்துக்குப் பொறுப்பு ஏற்று இருப்பவரும் அதை அனைத்து நிற்பவர்களும் இதை உறுதியாக நம்புகிறவர்கள்தான். கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் உள்ள உறவு மறுக்க முடியாதது. அது எந்த அளவுக்கு இருக்கு என்பதைப் பொறுத்துத் தான் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கலை உருவங்களை ரசித்து, கோட்பாடு பற்றிய வித்யாசங்களைப் போக்கிக் கொள்ளக் கூடும். கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு கலை உருவத்தை விளக்கி ஆதாரம் காட்டி கலை உருவத்தின் மதிப்பை அறியச் செய்ய முடியும். கலைகள் பல்வேறு மாறுபட்ட சித்தாந்தங்களுக்கு களமாக அமைந்துள்ளன என்பது

32