பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரி

13

பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகும் அறிவும் நிரம்பின அவர்களுக்குக் கபிலர் தமிழறிவு ஊட்டினார். பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவையும் கண்டு வியந்தார்கள். அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் பாரியின் புகழோடு அவனுடைய பெண்களின் புகழையும் பரப்பினார்கள். பாண்டிய மன்னனுக்குப் பாரி மகளிரின் பெருமை தெரிந்தது. அவர்களை மணந்துகொண்டால் பாரியின் உறவும் கிடைக்கும் என்று எண்ணினான். அவனுக்கு முன்பே மணமாகியிருந்தது; பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். பல பெண்களை மணப்பது மன்னர்களின் வழக்கமாக இருந்ததால் அவனுக்குப் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று.

அவன் பாரிக்கு ஓலை போக்கினான். இரு பெண்களையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று ஓலை கூறியது. பாரி அதைக் கண்டவுடன் சினந்தான். அவன் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரும், “அரசர் அந்தப்புரத்தில் நூறு பேரோடு சேர்ந்து நாங்கள் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். வந்த தூதுவன் மறுப்புடன் மீண்டு சென்றான்.

பாரியின் புகழைக் கேட்டுப் பொறாமை அடைந்திருந்தான் பாண்டியன். ஆகவே அவன் தன் மகளை மணம் செய்து தர மறுத்ததையே காரணமாக வைத்துக்கொண்டு அவனோடு போர் தொடுக்க எண்ணினான். இந்தச் செய்தி சோழனுக்கும் சேரனுக்கும் எட்டியது. அவர்களும் பாரியின் மேன்மையை உணர்ந்து பொறாமை கொண்டவர்களே. அவர்களுக்கும் பாரியை அடக்கிவிட வேண்டும் என்ற