பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

எழு பெரு வள்ளல்கள்

மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான். அவள் உணவு உடை முதலியவற்றைப் பெற ஏற்பாடுகள் செய்தான். ஆனால் அவளைப் போய்ப் பார்க்கவில்லை. இந்தச் செய்தி முதலில் யாருக்கும் தெரியாது. பிறகு மெல்ல மெல்லப் பேகனுடைய உறவினருக்குத் தெரிந்தது.

கண்ணகி தன் கணவனுடைய சினத்துக்கு ஆளாகித் தவித்தாள். அவளுக்குப் பேகனுடைய அன்பு இனிக் கிடைக்குமோ என்ற ஏக்கம் வந்து விட்டது. வாழ்க்கையே குலைந்துவிட்டதாக எண்ணி மறுகினாள்.

பேகனிடம் கூறி அவன் சினத்தை மாற்ற வேண்டும் என்று அவனுடன் பழகுகிறவர்கள் யாவரும் நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு நல்லுரை கூறும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. பேகனுடன் நெருங்கிப் பழகும் புலவர்களைக் கொண்டு தான் இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று சில அன்பர்கள் எண்ணினார்கள்.

ஒரு சமயம் பரணர் வந்தார்; அவருடன் கபிலரும் வேறு சில புலவர்களும் வந்தார்கள். பரனரை நன்கு அறிந்திருந்தவரும் பேகனுடைய நண்பருமாகிய ஒருவர் அப்புலவரைத் தனியே சந்தித்து நிகழ்ந்ததைச் சொன்னர்; எப்படியாவது கண்ணகியை மீட்டும் பேகனோடு வாழும்படி வகை செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

பரணர் அதைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். தாம் ஒருவராக நின்று பேகன் மனத்தை மாற்றுவதைவிடக் கபிலர் முதலிய மற்றப் புலவர்களையும் துணையாகக் கொண்டு அவனை