பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

த. கோவேந்தன்



கோதாதேவி, இறைவனை நாயகனாகப் பெறுவதற்குப் பாவை நோன்பு நோற்பவள். பாஞ்சாலி அந்த இறைவன் பால் பக்தி பூண்டவள். அவள் வாக்கைப் பொய்யாக்கி விடக்கூடாதே!

"கண்ணன், வீடுமர் செய்த குளுரையைக் காக்கத் தன் சூளுரையை விடுத்துப் போரில் ஆயுதம் எடுத்தவன் ஆயிற்றே! அவனைப் போல், பக்தர் சொல்லைப் பொய்யாக்காமல் மெய்யாக்குவதே. நாம் அவனுக்குத் தகுதியானவள் என்பதை காட்டும்" என்று முடிவு செய்தாள் ஆண்டாள்.

பாஞ்சாலி சொல் பழுதாகலாகாது என்பதற்காகவே அரங்கன், வடபத்ரசாயி, வடமலைவாளன் (வேங்கடநாதன்), சோலைமலை அழகன், செண்டலங்காரன் ஆகிய ஐவர் அர்ச்சாமூர்த்திகளை நோன்பு நோற்று மணவாளராக அடைந்தாள் ஆண்டாள்.

பக்தர்க்காக எதையும் சாதிக்க வேண்டும் என்ற கோதையின் பெருங்குணம் இதனால் தெரிகின்றது அன்றோ?

"சீவல மாறன் கதை" என்ற காவியம் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றது.

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் என்ற நூலும் இச் செய்தியை நான்கு பாடல்களில் குறிக்கின்றது.


"அரங்கன் முதல் பாரில் ஐவரை எய்துவான்.
ஐந்துவயதில் பிஞ்சாய்ப் பழுத்த பெண் அமுதம்"

"தென்அரங் கேசன்முதல் ஐவரும் குடிபுகச்
சிற்றிலை இழைத்தருள்கவே!"

"தென்னரங் கேசன்முதல் ஐவரும் விருந்து உண்ணச்
சிறுசோறு இழைத்தருள்கவே!"

அரங்கேசன்முதலாம் முதல் ஐவரும் மகிழவே
பாமாலைஅருளும் புத்தூர் மடந்தை"


என்பன பிள்ளைத்தமிழில் வரும் இடங்கள்.

ஆண்டாள் வரலாற்றில் இடம் பெறாத இச்செய்தி, நாட்டில் வழங்கி வரும் செவிவழிச் செய்தியே யாகும்.