பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

த. கோவேந்தன்



21. அர்ச்சுனன் அம்புக்கு அஞ்சிய தேவர்கள்

பாண்டவரும் கெளரவரும் துரோனரிடம் வித்தை பயின்றனர். பாண்டவர் புத்திசாலிகள் ஆகையால், வித்தையில் மிகமிகச் சிறப்புற்றனர். கெளரவர் எவ்வளவு முயன்று கற்றும் பின் தங்கியே நின்றனர்.

ஐராவத பூசைப் பெருவிழா நடத்தினால் தாங்களும் பாண்டவர்போல் புத்திசாலிகளாகலாம் என்று கெளரவர் கருதினர்.

பெரும் பொருட் செலவு செய்து, ஐராவத யானையின் உருவமைத்துப் பூசை செய்துமுடித்தனர்.

தானம் தட்சினைகள் தாராளமாக வழங்கினர்.

இதைக் கண்ட குந்தி தேவிக்கும் ஓர் ஆசை பிறந்தது. நம் மக்களும் இத்தகைய ஐராவத பூசை செய்தால் சிறப்படையலாமே என்று சிந்தித்தாள். ஆனாலும் நாம் கெளரவர் போல் பெரும் பொருட்செலவு செய்ய இயலாதே! என்று கவலையுற்றாள்.

அன்னையின் கவலை அறிந்த அர்ச்சுனன், அக்கவலையைக் கண்டிப்பாகத் தான் போக்குவதாக உறுதி அளித்தான்.

கெளரவர் செய்த பூசையைவிடப் பலமடங்கு சிறப்பாகச் செய்து காட்டவேண்டும் என்று கருதினான் அர்ச்சுனன்.

ஐராவதத்தின் உருவத்தைத் தானே அவர்கள் பூசித்தார்கள்? நாம் ஐராவத யானையையே நேரில் கொணர்ந்து பூசிப்போம் என்பது அவன் திட்டம்.

ஐராவதத்தை வரவழைப்பது எப்படி?

தேவர் தலைவனுக்கு ஒரு கடிதம் எழுதினான் அர்ச்சுனன். அதைத் தன் அம்பில் பூட்டி விண்ணுலகுக்கு ஏவினான்.