பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

த. கோவேந்தன்



ஆனால் வழியெங்கும் மலர்கள் குவிந்தவண்ணமே இருந்தன.

சிவகணங்கள் என்னும் சிவத் தொண்டர்கள், குவியும் மலர்களை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஒருமுறை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் மறுகணமே மலர்கள் குவிந்துவிடும். மலர்களை அள்ளி அள்ளி அப்புறப்படுத்திச் சிவகணங்கள் ஓய்ந்து சோர்ந்து போய்க் கொண்டிருந்தனர்.

இக்காட்சியைக் கண்ட அருச்சுனன், கண்ணனிடம் "எம்பெருமானே பனி மூடிய பகுதியில் மலர்கள் மலர இயலாது. ஆனால், மலர்கள் மலைபோல் குவிந்து கொண்டே இருக்கின்றனவே! இக்காட்சி வியப்பாக இல்லையா?" என்று கேட்டான்.

"அருச்சுனா! இம்மலர்கள் இங்குப் பூப்பவை அல்ல. நிலவுலகில் மலர்வன. அவை அனைத்தும் இங்கே வந்து குவிகின்றன" என்றான் கண்ணன்.

"நிலவுலக மலர்கள் தானாக எப்படி இங்கு வர இயலும்?" என்று கேட்டான் அருச்சுனன்.

"தானாக இம்மலர்கள் இங்குக் குவியவில்லை. நிலவுலகில் உன் அண்ணன் வீமன், தெய்வத்துக்கு அருச்சனை செய்த மலர்கள் இவை. அவன் அருச்சனையில் பயன்பட்ட மலர்கள் இங்குக் குவிக்கின்றன" என்றான் கண்ணன்.

"வீமனாவது, அருச்சனை செய்வதாவது? அவனுக்கு அருச்சனை செய்ய நேரந்தான் ஏது? உணவு உண்ணவே நேரம் போதவில்லையே அப்படியிருக்கும் போது, அவன் எப்போது அருச்சனை செய்வான்? அப்படியே அருச்சனை செய்தாலும், யாராவது கண்டிருக்கமாட்டார்களா? இதுகாறும் யாரும் கண்டதில்லையே! நீ கூறுவதை எப்படி நம்ப முடியும்" என்று அருச்சுனன் நீண்ட வினா எழுப்பினான்.