பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

61



தவம் செய்வதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று அதனைத் தேர்ந்தெடுத்தான்.

"என் மகனைக் கொன்று அவன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்கவேண்டும்" என்று தான் இறைவனிடம் கேட்க வேண்டிய வரத்தையும் தீர்மானித்துக் கொண்டான்.

பல ஆண்டுகள் தவம் செய்தான். வரமும் பெற்றுவிட்டான். இனித் தவத்தை முடிக்கலாம் என்ற நிலை.

அப்போது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாரதப் போரில் அபிமன்யுவைச் சயத்திரதன் வஞ்சனை செய்து கொன்று விட்டான்.

இதை அறிந்த அபிமன்யுவின் தந்தை அருச்சுனன் "சயத்திரதனைக் கொன்றே தீருவேன்" என்று சபதம் பூண்டான். கண்ணன் உதவியால் மறுநாள் மாலை அருச்சுனன் ஓர் அம்பால் சயத்திரதன் தலையைக் கொய்தான்.

உடனே கண்ணன் "அருச்சுனா! அந்தத் தலையை நிலத்திற்படவிடாதே. மேலும் மேலும் அம்பு தொடுத்துச் சியமந்தக தடாகத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் இவன் தந்தை கையில் விழப்பண்ணு" என்று ஏவினான்.

கண்ணன் சொன்னபடியே அருச்சுனன் செய்தான். சயத்திரதன் தலை, தவம் செய்து கொண்டிருந்தவனுடைய விரித்தகையில் விழுந்தது. எதிர்பாராது விழுந்தமையால், துணுக்குற் தந்தை, தன்மகன் தலையைக் கீழே போட்டான்.

அவன் பெற்ற வரம் பலித்துவிட்டது. "என் மகன் தலையை நிலத்தில் இட்டவன் தலை நொறுங்க வேண்டும்" என்பது தானே அவன் பெற்ற வரம்.

இப்போது நிலத்தில் இட்டவன் அவன் தானே! அக்கணமே அவன் தலை நொறுங்கி உயிர் இழந்தான். திருந்தாத தீயவனைக் காக்க எண்ணியவன் அத்தீயவனோடு தானும் மாண்டான்.