10
நிரந்தரப் பசுமை மிகுந்த, இனிமையான இயற்கைச் சூழலின் ஈரப்பதம்தான் ஜீவநாடி. சுமார் 750 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான, குன்றும் குன்று சார்ந்த பிரதேசங்கள்தாம் ஏலச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாழ்வு தரும். 150 செ. மீ. அளவிற்குக் குறைவுபடாத வருடாந்தர மழை பரவலாகப் பெய்வதும் ஏலக்காய்க்கு நல்வாழ்வு தரும்!
பெரிய ஏலக்காய்
பெரிய ரக ஏலக்காய், (Amomum Subultarum) இமயமலைப் பிராந்தியங்களிலே, சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய இந்திய மாநிலங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது.
இதுவும் விலை மதிப்புக் கொண்ட பணப்பயிராகவே கருதப்படும்.
பெரிய ரக ஏலக்காய் விளைச்சலிலும் இந்திய நாடு தான் முன்னணியில் நிற்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் முக்கியமாக பெரிய ஏலக்காய் செல்வாக்குப் பெற்றுள்ளது!
பூடான், நேபாளம் ஆகிய பகுதிகளிலும் இந்த வகை ஏலம் விளையும்.
அருணாசலப் பிரதேசம், நாகாலந்த், மேகாலயா, அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் திரிபுரா பகுதிகளிலும் இந்தியப் பெரிய ஏலக்காய் புதிதாகச் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் இமயமலைப் பிராந்தியங்களில் 10 முதல் 33° சி. அளவிலான சீதோஷ்ண நிலையில், 1000 மி. மீ - 1500 மி. மீ. மழை அளவில் பெரிய ஏலச் செடிகள் தழைத்தும் செழித்தும் வளர்ச்சி அடைகின்றன.