பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

கொஞ்சிற்று சலங்கை; குலுங்கிற்று மேகலை
தென்றல் அசைந்ததோ தேரொன்று நகர்ந்ததோ
மன்னவன் மகளாயினும் அவளும் மங்கையே
வீரம் பாடும் விழிகளுக்கு முன்னால்
ஓரவிழி கொண்டு ஓராயிரம் பேசினாள்
இளவல் அம்பிகாபதி இடத்தை மறந்தான்
இட்டஅடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து வந்த பேரழகை
வர்ணிக்கத் தொடங்கினான் கம்பர் அதிர்ந்தார்
கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று ஒரு கிழவி
கூவுகின்றாள் வீதியிலே எனப்பாட்டை முடித்தார்
வேந்தனுக்கு வியப்பில் புருவம் உயர்ந்தது
மகன் தொடங்க தந்தை முடித்தது ஏனோ
ஆசு பாட வந்த அவசரம் என்னவோ
வெளி மாடத்தில் நின்று வீதியை நோக்கினார்
வெள்ளை உடுத்திய கிழவி ஒருத்தி
கிழங்கு விற்க கண்டனர் ஆங்கே
பார்வேந்தன் மகள் மேல் பாவேந்தன் மகனுக்கு
மையலோ என்றதோர் ஐயம் வெளிப்பட்ட தம்மா
பெரிய இடத்தைப் பற்றிப் பேசத் துணிவில்லை
கம்பரின் வாக்கைக் காக்க வந்தவள்
கலைமகளே என்றுணர்ந்தான் சோழன்