பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமை உரை 11

வுண்மையையெல்லாம் உட்கொண்டே ஆசிரியர் பரிமேலழகரும்,

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பிற்றலைப் பிரித லின்று"

என்னும் குறளுரையில் பழங்குடி என்பதற்கு விளக்கம் எழுதுங்கால், “பழங்குடியாவது தொன்று தொட்டு சேர சோழ பாண்டியர் என்றாற் போல படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டுவரும் குடி" என்று எழுதியுள்ளார்.

உலகத்தில் உயிரினங்கள் முதலில் தோற்றத்திற்கேற்ற சூழ்நிலைகளையுடையது தமிழகமே என்றும் அதற்குக் காரணம் உலக உருண்டையில் உள்ள அழற் குழமயின் வெம்மை தணிந்து முதலில் உயிரினங்கள் தோன்றுதற்கேற்ற வெப்ப தட்ப நிலையையடைந்த, நில நடுக்கோட்டின் அருகில் தமிழகம் அமைந்திருப்பதே என்றும் இக்காலத்து நிலநூல், உயிர் நூல் வல்லார் பலரும் ஆராய்ந்து கூறி வருகின்றனர். இவ் ஆய்வுரைகளும் தமிழருடைய தோற்றத்தின் தொன்மையை நன்கு நாட்டுதற்குற்ற சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழர் தொன்மையை நாட்டு தற்குரிய சான்றுகள் இவை போல்வன இன்னும் எத்தனையோ உள. அவற்றையெல்லாம் ஈண்டுரைப்பிற் பெருகும்.

இங்ஙனம் அலைகடலின் கொந்களிப்பில் தோன்றிய மலையின் கண் பிறந்த தொன்மையையுடையோர் தமிழ் மக்கள் என்னும் இக் கொள்கையை, அவர்கள் பேசிய தமிழ் மொழியின் பிறப்பிடமாக மலையினையே பழந்தமிழ்ப் பாட்டுக்கள் பல கூறுவதும் நன்கு வலியுறுத்துகின்றன.

"ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னேரி லாத தமிழ்"

என்ற பழம் பாட்டு சூரியனோடு தமிழுக்குப் பல்வகையில் ஒப்புமை கூறப்புகுந்து இரண்டிற்கும் பிறப்பிட ஒற்றுமை கூறுங்கால், "ஒங்கலிடைவந்து" என்று மலையையே தமிழுக்கும் பிறப்பிடமாகக் கூறுகின்றது.