54 . ஐந்திணை வளம் 2. பாரார் கொல்! தோழி சொல்லியவற்றைக் கேட்டதும், தலைவியின் உள்ளத்திலே, பலப்பல சிந்தனைகள் அலையலையாக எழுகின்றன. அவற்றையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டவளாக அவள், தலைவனின் செலவு அவனுக்கும் ஆபத்துவிளைக்கக்கூடியதாயிற்றே என அதைக்குறித்துத்தான் பெரிதும் கவலைப்படத் தொடங்குகின்றாள். இந்தக் கவலையோடு, தோழியின் பேச்சிற்கு எதிராகத் தன்னுடைய கருத்தினையும் சொல்லுகின்றாள். தோழி, கண்ணோட்டம் என்பதாகிய ஒன்று மிகவும் மென்தன்மையினைக் கொண்டிருப்பதாகும். நம் தலைவரோ, இப்பொழுது, நம்மேல் அத்தகைய அருள் நோக்கத்தினை இல்லாதாராகவே போய்விட்டனர்! 'பொருளினைத் தேடிவருதலிலே தம் மனத்தைப் போகவிட்டவர் அவர் என்கின்றாய். முன்னர், நம்மை என்றும் பிரியாதிருப்பதாக நமக்கு உறுதி கூறியவரும் அவரே அன்றோ! இப்போது, பிரிய நினைப்பவரும் அவரேதாம்! ஆயின், நிலையற்ற உள்ளத்தவரான அவரது கருத்தினை, நீயும் இப்போது உணர்ந்து சொன்னாய். 'வில்லின் ஆற்றலினாலே ஆறலைத்து உண்ணுகின்ற ஒழுக்கத்தை உடையவர்கள் மறவர்கள். அவர்கள் விரைந்து வழிச்செல்வாரை வருத்திக் கொள்ளையடிப்பார்கள் என்பதனையும் கேட்டிருக்கின்றோம். கற்கள் சூழ்ந்துள்ள சிறு தூறுகள் நிறைந்தது பாலை நிலத்து வழி என்றும் அறிந்தோர் சொல்வார்கள். அதனால், கொள்ளையிடும் அவர்கள், பிறர் அறியாதேயே மறைந்திருந்து தம் தொழிலினைத் தவறாது செய்து, அதனிடத்துத் தாமே வெற்றிகொள்வதும் இயல்பாகும். இத்தகைய கொடுமையினை உடைய வழியென்பதைக் கூட் அவர் நினைத்துப் பார்க்க மாட்டாரோ? யான் இனி யாது செய்வேன் தோழி? இவ்வாறு சொல்லிச் சோர்வு கொள்ளுகின்றாள் தலைவி. அவளுடைய ஏக்கச் சுமையினைப் பாடலிலேயும் தெளிவாகப் பார்க்கின்றோம்.