பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12


தம்பி! இன்னும் ஒன்று. தாய் என்ற சொல் நம்மைப் பெற்றோர்களுக்கு மட்டும் வைக்கிற ஒரு சொல் என்று எண்ணி விடாதே. நம்மைப் பெற்ற நாட்டிற்கும் ‘தாய் நாடு’ என்று பெயர். தம்மை வளர்த்த மொழிக்கும் ‘தாய் மொழி’ எனப் பெயர். தமிழ் மக்களாகிய நமக்குத் தமிழ்நாடும், தமிழ் மொழியுமே தாய்நாடும் தாய்மொழியுமாகும். இவைகளை நமது தாய்ச் செல்வங்களேயாம். தாயை இழந்த பிள்ளைகள் சில காலம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ முடியும். ஆனால், தாய் நாட்டை இழந்து, தாய்மொழியை இழந்துபோன மக்கள் எக்காலத்தும் வாழ இயலாது. ஒருகால் வாழ்ந்தாலும், அவ்வாழ்வு வாழ்வாக இராது.

தம்பி முடிவாகக் கூறுகிறேன். உனக்கு என்று ஒரு தாய் இருந்தால், அவளைப் போற்றி வாழ், இன்றேல் தாயை இழந்து திக்கற்றுத் தெருவில் நிற்கும் பிள்ளைகளைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு மொழி இருந்தால், அதனை வளர்த்து வாழ்! இன்றேல், தன் மொழியை இறந்துபடச்செய்து பிற மொழிகளைக் கலந்து குளறிப்பேசி வாழும் மக்களைப் பார்த்தேனும் திருந்து.

உனக்கென்று ஒரு நாடு இருந்தால், அந்த நாட்டைக் காப்பற்றி வாழ்! இன்றேல், நாடற்று நாடோடிகளாய்த் திரியும் மக்களைப் பார்த்தேனும் திருந்து!

இவை மூன்றும் உனது தாய்ச் செல்வங்களாகும். இவைகள் வாழ்ந்தாலன்றி உனக்கு வாழ்வில்லை. இம்மூன்றும் உன்னைப் பெற்றவைகள், ஆனால், அவைகள் உன்னைப் பெற்றதினால் பெற்ற பயன் எனன? என்பதை எண்ணிப் பார்! எண்ணிப் பார்க்க வேண்டியது உனது கடமை. எண்ணு! துணி! செய்!!!

வாழட்டும் தாய்ச் செல்வங்கள்!