பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


கண் : என்ன பாட்டி! ஏமாற்றுகிறீர்கள். அந்த மன வேற்றுமையைத் தான் குறிப்பிட்டுக் கேட்கிறேன். என்னோடு அவள் சேர்வதால், அவ்வேற்றுமை கெட்டு, என் மனத்தோடு அவள் மனமும் ஒன்றுபடாதா என்ன?

பாட்டி : நன்றாகக் கேட்கிறாய் கண்ணு! நன்கு பேசக் கற்றுக் கொண்டுவிட்டாய்!

கண் : பாராட்டுதல் இருக்கட்டும் பாட்டி! பதில் வேண்டும் எனக்கும்.

பாட்டி : நல்லதைக் கெட்டது எளிதாக வென்று விடுகிறது. ‘நல்லது கெட்டதின் முன்பு நிலைத்து நிற்பது’ என்பது மிகவும் கடினமானது.

கண் : பாட்டி! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. தயவு செய்து விளக்கமாகச் சொல்லுங்கள்.

பாட்டி : நல்லதை நினைக்கவும், நல்லதைச் சொல்லவும், நல்லதைச் செய்யவும், அதிக மனவலிமையும் உறுதியும் வேண்டும். கெட்டதை நினைக்க, கெட்டதைச் சொல்ல, கெட்டதைச் செய்ய எவராலும் எளிதாக இயலும். நல்லவளாக வாழ ஆண்டுகள் பல வேண்டும். கெட்டவள் ஆக ஒரே வினாடி போதும். இந்த வலிமைக் குறைவினால்தான் கண்ணு, நம் நாட்டில் நல்ல மனம் படைத்தவர்கள் அருகியும், கெட்ட மனம் படைத்தவர்கள் பெருகியும் காணப்படுகிறார்கள் பெருமீனுக்குச் சிறு மீன் இரையாவது இயல்புதானே?

கண் : அப்படியானால் என் மனது நல்லது என்றும் செல்லத்தின் மனது கெட்டது என்றும் தாங்கள் கருதுகிறீர்கள். இது அவரவர் பிள்ளைகளின் மீது அவரவர்கள் வைக்கும் பற்றுதலாக இருக்க முடியுமே தவிர, உண்மையாக இருக்க முடியாதே பாட்டி!

பாட்டி : கண்ணு! நீ கூறுவது உண்மைதான். செல்லத்தின் பெற்றோர்களும் கூடச் செல்லத்தை அப்படித் தான் எச்சரிப்பார்கள். எச்சரித்துப் பயன் என்ன?