பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30


உழுது உண்டு வாழும் ஆண் மக்களும், பிள்ளையைப் பெற்ற அன்றே சேற்றில் இறங்கி நாற்று நடும் பெண் மக்களும், ஆடையும் அரைஞாணுமின்றி ஓடி விளையாடும் குழந்தைகளும், தங்கள் தங்கள் உடற்செல்வத்தை நகர மக்களுக்கு நன்கு காட்டி வருகிறார்கள்.

வெயில், மழை, பனி, காற்று ஆகிய நான்கும் மக்கள் உடலுக்கு உறுதி செய்யும் இயற்கைச் செல்வங்கள். இவற்றுள் வெயிலை லிலக்கி, மூன்றை மட்டும் ஏற்றால் உடல் நலம் கெடாமல் என்ன செய்யும்? மனிதன் ஒருவனே மலைபோன்ற இத்தவறுகளைச் செய்கிறான் விலங்குகளும், பறவைகளும் இத்தவறைச் செய்வதில்லை. அவை நான்கையும் பயன்படுத்திக்கொண்டு உடற்செல்வத்தையுப் பாதுகாத்து வருகின்றன.

“உணவு உடலுக்குத் தேவை” என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், “உணவை உண்ணும் உடலுக்கு உழைப்புத் தேவை” என்பதைச் சிலர் அறியார்கள். சிற்றூரில் வாழும் மக்கள் உணவுக்காக உழைத்துத் தீரவும் உழைப்புக்காக உண்டு தீரவும் வேண்டிய கட்டாய வாழ்க்கையில் உழன்று வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைக் கட்டடமும், உடல்நலச் செல்வமும் உழைப்பின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. அதனால், அவர்கள் விரும்பியதெல்லாம் உண்கிறார்கள்; வேண்டிய அளவு உண்கிறார்கள் “உண்பது செரிக்க உழைப்பது துணை செய்கிறது” என்பதை உழைப்பாளிகளாகிய சிற்றூர் மக்களிடத்தில்தான் காண முடிகிறது. உழைக்காது உண்ணுகின்ற மக்கள் நகர வாழ்வில் பலருண்டு. அவர்கள் “எதை உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்?” என ஆங்கில மருத்துவர்களிடம் தேடிச் சென்று கேட்பதும், அவர் துருவி ஆராய்ந்து பார்த்து, எடையில் நிறுத்து , கால்வாசி உணவை அரைவாசி வேகவைத்து, செரிக்கும் மருந்துடன் சேர்த்து உண்ணச் செய்வதும் வழக்கமாகப் போயிற்று.