பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



31


செரிக்கும் மருந்துடன் உணவும் சேர்ந்து மனிதன் வயிற்றில் போனால்தானா செரிக்கும்?உயிரற்ற இயந்திரத்தில் போய்ச் சேர்ந்தாலும் செரித்துவிடும் என்பதை இப்போது எவரும் நன்கு அறியலாம். ‘உழைப்பு ஒன்றே உணவைச் செரிக்கச் செய்யும் மருந்து’ என்பதை உடற்செல்வம் விரும்பும் மக்கள் அனைவரும் உணர வேண்டும். உழைத்து உண்ணாத எவரும், உடற்செல்வத்தைப் பெற முடியாது என்பது முடிவு கட்டப் பெற்ற முடிவாகும்.

பொருட் செல்வம் தேட முயற்சி தேவை; உடற்செல்வம் தேடப் பயிற்சி தேவை. உடற்பயிற்சியின்றி உடற்செல்வத்தைப் பெற முடியாது. உடற்பயிற்சி என்றதும் தண்டால், கரலாக்கட்டை, எடைக்குண்டு, கைக்குண்டு முதலியவைகளை நினைத்துக்கொள்ள வேண்டாம். உடற்பயிற்சிக்கு அதுவும் தேவைதான். ஆனால், அதைப்பற்றிச் சொன்னால் சோம்பேறிகளின் காதுகளில் அது நுழையுமா? நுழையாது நான் சொல்ல வந்த உடற்பயிற்சி வேறு. அது உன் வேலைகளையாவது நீயே செய் என்பதுதான்.

அவரவர் வேலைகளை அவரவர் செய்வதன்மூலம் ஒரு உடற்பயிற்சி செய்து முடிகிறது. உன் வேலைகளை, நீயே செய் என்பதற்குப் பிறரைக் கொண்டு செய்து கொள்ளாதே என்பது பொருள். அதிகாலையில் எழுந்திரு. உனது போர்வையை மடி படுக்கையைத் தட்டிச் சுத்து; அதை இருக்குமிடத்திற்கு கொண்டுபோய் வை! கிணறாக இருந்தால் நீரை நீயே இறைத்துக் குளி குழாயாக இருந்தால் குளிக்கும் அறைக்கு நீரைக் கொண்டுபோய்க் குளி ஆறு, குளங்களானால் விரைந்து நடந்து செல்! உன் ஆடைகளை நீயே துவை இல்லாவிடில் தலையைத் துவட்டிய துண்டையாவது நீயே கசக்கிக் காய வை. உனக்கு வேண்டியதை நீயே போய் எடு! இவ்வாறு மனைவியையும், மக்களையும், அவரவர் வேலைகளைப் பிறர் துணையின்றிச் செய்யும்படி பழக்கு!