பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37


மணி : ஆழ்ந்த சிந்தனை செய்தான். ‘ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்’ என்று மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தி மயங்கினான். முத்துவை நோக்கி, ‘நண்பா வழி திரும்பி நடப்போம் வா!’ என அழைத்தான். இருவரும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுச் சென்ற வழியே திரும்பினர்!

மணி : ‘நண்பா! நம்மால் செல்வத்தைக் காண முடியுமா’ என்றான்.

முத்து : ‘ஏன் முடியாது? முயன்றால் முடியும்’ என்றான்.

மணி : ‘நண்பனே! உன்னால் முயன்று காண முடியுமா?’

முத்து : ‘முயன்றால் முடியும். ஆனால், நானோ பரம ஏழை. ஒவ்வொரு நாள் உணவுக்கும் உழைத்துத் தீர வேண்டும். எந்த ஏழைக்காவது சிறிது உணவும் கொடுத்தாக வேண்டும். நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோருக்கும் துணை இருந்தாக வேண்டும். இவைகளை விட்டுச் செல்வத்தைத் தேட, முயற்சி செய்ய, எனக்குப் பொழுது ஏது? என்றான்

மணி : ‘நண்பா! உன்னால் முடியாத ‘அது’ என்னால் முடிந்துவிட்டது. நான் செல்வத்தைக் கண்டுவிட்டேன்’ என்று கூறினான்.

முத்து : ‘ஆ! உண்மையாகவா? எனக்குக் காட்ட மாட்டாயா?’ என்றான்.

மணி : ‘நான் கண்டது மட்டுமல்ல, அது என் கையிலும் அகப்பட்டுக் கொண்டது’ எனக் கூறி, முத்துவின் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் க்ண்களில் ஒத்திக் கொண்டு, கண்ணீரை உகுத்து, ‘முத்து! நீயே செல்வம்’ என்றான்.

முத்து : நண்பனே! நன்றாகக் காட்டினாய். நன்கு. கண்டு கொண்டேன் நீயே நிறைந்த செல்வம் எனக் கூறி மார்புறத் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.