பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

செல்வத்தை இழந்துவிட்டால், அதை எவராலும் எவ்விதத்தும் திரும்பப் பெறமுடியாது. இழந்தது இழந்தது தான். அச்செல்வம் இருந்த இடத்தை நிரப்பவோ, ஈடு செய்யவோ எக்காலத்தும் இயலாத அவ்வளவு உயர்ந்த செல்வமாகும் அது. ஆகவே, செல்வங்களனைத்திலும் தலையாய செல்வம் ஆதலின், அதனைத் “தாய் செல்வம்” எனவும் கருதலாம்.

‘பட்சம், பாசம், பக்தி, கடாட்சம், கிருபை’ என வடமொழியாளர் கூறுவதும், ‘அன்பு, இரக்கம், பற்று காதல், கண்ணோட்டம்’ எனத் தமிழ் மொழியாளர் கூறுவதும், மக்கள் மனம் இளகிநிற்கும் நிகழ்ச்சி ஒன்றையே குறிக்கும். இச்சொற்கள் இடவேறுபாடு, மன வேறுபாடு ஆகியவைகளுக்குத் தக்கவாறு கையாளப் பெறும். என்றாலும், தாய் தன் பிள்ளையிடத்துக் காட்டுகின்ற அன்பே தலையாய அன்பாகும். இதனையே அறிஞர்கள் ‘தாயன்பு’ எனக் குறிப்பிட்டுக் கூறுவர்.

சிறந்த துறவிகளில் இருவர் துறந்தும் துறவாதவர். ஒருவர் இளங்கோவடிகள்; மற்றொருவர் பட்டினத்தடிகள், இளங்கோவடிகளால் நாட்டை, முடியை நல்வாழ்வை, பொன்னை, மணியை, பூவணையை, பட்டதைத், பல்லக்கை, பட்டுடையைத் துறக்க முடிந்தது. ஆனால், அவரால் தமிழைத் துறக்கச் சிறிதும் முடியவில்லை. அவரது துறவாத தமிழ்ப் பற்றிற்குச் சிலப்பதிகாரம் இன்றும் சான்று கூறிக் கொண்டிருக்கிறது.

பட்டினத்தடிகளும் அவ்வாறே. அனைத்தும் துறக்க முடிந்தும், துறந்தும், தாய்ச் செல்வத்தைத் துறக்க அவரால் முடியவே இல்லை.

“குடியிருந்த வீட்டுக்குக் கொள்ளியை வைக்க.”
“வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பலாகுதே.”
“அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு.”
“பூமானே என்றழைத்த வாய்க்கு.”
“எப் பிறப்பிற் காண்பேன் இனி?”