சு. சமுத்திரம்
105
இது தப்பான கருத்து. சைக்கியாட்ரிஸ்டுகளிலும் மெண்டல் கேஸ்கள் உண்டு. ஆனால், பொய்யர்கள் கிடையாது. அதனால், நான் சொல்வதை நீங்க நம்பணும்... ஒங்களுக்கு எழுத்து ஒரு கிப்டா கிடைத்திருக்கு. முயற்சி செய்தால் நீங்க மிகச் சிறந்த எழுத்தாளராய் மாறலாம். மனம் வைத்தால், அப்படி மாற முடியும். கெட்டுப்போன அருணகிரிநாதர்தான் திருப்புகழ் தந்தார். மனநோய் பிடித்த சார்லஸ் டிக்கன்ஸ் தான், டேல்ஸ் ஆப் டூ சிட்டிஸ், பிக்விக் பேப்பர்ஸ் முதலிய அற்புதப் படைப்புக்களைத் தந்தார். அதனால், கெட்டுப் போனதை, அல்லது மன மாற்றத்தைப் ஒரு அனுபவமாய் எடுத்து, நீங்க அதை எழுத்தில் ஆரோக்கியமாய் மாற்றலாம். நான் சொல்வது சரியா எழுத்தாளரே...”
மனோகர் மனதில் ஒரு குறுகுறுப்பு. சின்னதாய் ஒரு கம்பீரம். புன்னகைத்தான். டாக்டர் சந்திரசேகர் தொடர்ந்தார்.
“நான், சைக்கியாட்ரிஸ்ட் யூரலாஜிஸ்ட்... செக்ஸாலஜிஸ்ட்... அதோடு நல்ல வாசகன். நீங்க எழுதியதை, ஒரு நிபுணராய் படிக்கத் துவங்கி, ஒரு வாசகனாய் முடித்தேன். உதாரணத்திற்கு, நீங்க எழுதிய முன்னுரையை வாசித்துக் காட்டுறேன் பாருங்க... இதை நீங்க எழுதியதாய் அனுமானிக்காமல், மனதை உதறிப் போட்டுவிட்டு, ரசிகனாய் கேட்கணும்.”
டாக்டர். சந்திரசேகரன், அவன் எழுதிய முதல் பக்கத்தை படிக்கத் துவங்கினார்.
“தமிழகத்தில் பொதுவாக பலவகைக் கிராமங்கள் உண்டு. முதலாவது, சமபலத்தில் ஆன சாதிகளைக் கொண்ட கிராமம் இங்கே யானைக்குப் புலியிடம் பயம். புலிக்கு யானையிடம் பயம் என்பது மாதிரி பரஸ்பர பயமும் மரியாதையும் கொண்ட இந்த சாதியினர் பொதுவாய் அடித்துக்கொள்ள மாட்டர்கள். ஆனால், தப்பித் தவறி சாதிச் சண்டை வந்தாலோ, அது தமிழகப்போர் மாதிரி ஆகிவிடும். இரண்டாவது வகை கிராமம், சிறுபாண்மைச் சாதியும், பெரும்பான்மைச் சாதியும் கொண்டது. இந்த சாதியினர் அடக்கியும், அடங்கியும் போவார்கள். ஆனால், அடக்கப்படுவது அத்துமீறல் ஆகும்போது, இதர கிராமங்களில் பெரும்பான்மையாய் இருக்கும் இந்தக் கிராமத்தில் சிறுபான்மைச் சாதியினர், தம் சாதியின் பலத்தோடு ஆதிக்க சாதியை எதிர்த்துப் பொங்கி எழுவார்கள். இது மாவட்டப் போராக மாறும் மூன்றாவது வகைக் கிராமம், ஒரே ஜாதியைக் கொண்டது. இங்கே சாதிச் சண்டைக்குப் பதிலாக எந்தக் குடும்பம், பெரிய குடும்பம் என்ற பங்காளிச் சண்டைகள். எந்தத் தெரு, பெரிய தெரு என்ற வீதிச் சண்டைகள்.