உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

155

ஒரு தடியன்... இப்படில்லாம் நடக்கலாம் என்று எதிர்பார்த்து அதை சமாளிக்கிற தைரியத்தோட வர்றவங்க... இவங்ககிட்ட அந்தப் பயலுவ பாச்சா நடக்காது. இவனுகளோட ஜோடிகளும் காசுக்காகவோ எதுக்காகவோ வருகிற பஜாரிங்க.”

“அதனால் இந்த பெரிசு ஜோடிங்ககிட்ட போகமாட்டாங்க... நீங்க திரும்பிப் பாராம ஓடுங்க... எப்போ காதலிக்கிறதுன்னு வந்துட்டிங்களோ அதுக்கு ஏத்தபடி நடந்துக்கணும். அதாவது சுற்றிச் சுற்றி வராவங்களை ஓரக்கண்ணாலதான் பார்க்கணும். அவங்கள அலட்சியப்படுத்துறது மாதிரி இருக்கணும். நீங்க என்னடான்னா வாரவனையும் போறவனையும் பயந்துகிட்டே பார்க்கிறீங்க... இதனால் உங்களை என்ன வேணுமுன்னாலும் செய்யலாமுன்னு அந்த கடற்கரை பொறுக்கிகளுக்கு ஒரு எண்ணம் வந்துடுது. அதனால உங்களுக்கு இந்த ஏரியா ஒத்துவராது. வேர்க்கடலை வேணுமா?”

கவிதாவும், செல்வாவும் வேர்க்கடலை வாங்கும் சமயத்தில், ஏதாவது நடந்துவிடக்கூடாதே என்ற பயத்தில், வேதாந்திபோல் பேசிய அந்த பிஞ்சுப் பழத்தின் கையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை திணித்து விட்டு, வேக வேகமாக வெளிச்சம் நிலவும் பகுதிக்கு வந்தார்கள். கூடவே ஆள்கூட்டம் அதிகம். பழக்கப்பட்ட குரல் கேட்டு கவிதா தெற்குப் பக்கமா திரும்பினாள். அவள் அண்ணன் மோகனன் நாலைந்து பேரோடு நாட்டியமாடிக் கொண்டிருக்கிறான் மத்தியில் ஒருவன் டேப் அடித்துக் கொண்டு கானா பாட்டை பாடுகிறான். அண்ணன் குதிக்கிறான்; தரையை மிதிக்கிறான். அங்குமிங்குமாய் தாவுகிறான்.

கவிதா, செல்வாவின் முதுகைத் தள்ளிக் கொண்டே கடற்கரையின் விளிம்பிற்கு ஓடினாள் அவனிடம் பதட்டத்தோடு பேசினாள்.

“இனிமேல் இந்தப் பக்கம் வரப்படாது செல்வா. அங்கே குதிச்சுக்கிட்டிருக்கே ஒரு கூட்டம் அதுல ஆடிக்கிட்டு இருக்கிறவன் எங்கண்ணன் மோகனன்... அவன் கண்ணுல பட்டால் அவ்வளவுதான்...”

“நானும் அதைத்தான் சொல்லணுமுன்னு நெனச்சேன்... ஒங்கண்ணன் நல்லாவே ஆடுறான்.”

“எங்கண்ணன் பரத நாட்டியம் நல்லா கற்றுக் கொண்டவன். பதினாலு வயசிலேயே இவன் நாட்டியம் அரங்கேறியது. அப்புறம் குடும்பத்துல என்னல்லாமோ நடந்தது இவன் சித்தன் போக்கு சிவன் போக்காய் ஆகிட்டான் இனிமேல் அவன் எக்கேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/155&oldid=1838377" இலிருந்து மீள்விக்கப்பட்டது