உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

புதைமண்

இல்லாமல், மனித நேயத்தோடு செல்வாவை தூக்கி நிறுத்தினான். அவன் கண்ணீரை துடைத்து விட்டான். தலையை கோதிவிட்டான் அழாதடா... அழாதடா... நீ நினைக்கிறபடி எதுவும் நடக்காதுடா... என்றபோது செல்வா, விம்மி வெடித்து அவன் மார்பில் சாய்ந்தான்.

மோகனனின் அகமும் புறமும் தீப்பற்றியது. இதயத்திலிருந்து ரத்தம் கீழ்நோக்கிப் பெருகி ஓடியது. நரம்புகள் புடைத்தன. ரத்தக் கோளங்கள் அகலமாகி, ஆழமாயின. மோகனன் ‘பயப்படாதடா... பயப்படாதடா... என்னால உன் காதலுக்கோ படிப்புக்கோ தடங்கல் வராது... வா கண்ணு... உள்ளே போய் விலாவாரியாய் பேசலாம்...’ என்றான்.

மோகனனின் அறைக்கதவு. அவனையும் செல்வாவையும் உள்ளே அனுப்பியபடியே, தானாக ஒட்டிக் கொண்டது. அப்படிப்பட்ட பூட்டு கொண்ட கதவு. அதாவது ஆட்டோமேடிக் கதவு சாதாரண கதவல்ல... அசாதரணமாய் தாளிடும் கதவு.

7

சித்திக்காரி, வாசலுக்கும், தெருவுக்குமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். பற்கள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறப் போயின வாய், செல்வாவை கொண்டு வந்த கணவனையும், அதற்கு உடந்தையாக இருந்த தன்னையும் திட்டிக் கொண்டது. ‘மணி இப்போதே நான்கு. காபி குடித்தால்தான் சமையல் செய்கிற மூடு வரும். குழந்தைகளா அவை? அசல் பேய்கள். அப்பன் மௌனசாமி என்றால், அதற்கு எதிரான குரங்குகள். ‘அம்மா அம்மா’ என்று அரற்றினால்கூட, ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். ஆனால், அண்ணனாம்... அண்ணன்... வரட்டும் இந்த அண்ணன்... வரட்டும் அந்த மனுஷர்...’

நல்லவேளையாக, சித்தப்பாவின் வீட்டிலிருந்து அந்த அரண்மனை வீட்டை பார்க்க முடியாது. இது உள்ளே தள்ளியும், அது வெளியே துருத்தியும் இருந்தன. செல்வா வீதியில் வருவதைத்தான், சித்தி, பார்த்தாள். தட்டுத் தடுமாறி வந்த அவனை நோக்கி, அதுவரைக்கும் பொறுக்க முடியாமல் வேக வேகமாய் நடந்தாள் ஆத்திரத்தில் அவன் உருவம் மட்டுமே அவளுக்கு மங்கலாகப் பதிந்தது. அந்த உருவத்தின் தடயங்கள் தட்டுப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/168&oldid=1854320" இலிருந்து மீள்விக்கப்பட்டது