உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

173

கற்பை காப்பாற்றணும்... செல்வா, அரிவாளை தேடிக் கொண்டிருந்தபோது, மோகனன் குரல் மீண்டும் கேட்டது.

“உங்க பால் கார்டுன்னு நினைக்கேன். வழியில் கிடந்தது.”

சித்தி, அந்த பால் கார்டை வாங்கி உற்றுப் பார்த்தபடியே, “ரொம்ப நன்றி ஸார்” என்றாள். கண்களை சுழலவிட்ட மோகனனுக்கு கதவிடுக்கில், செல்வா, அரிவாளோடு நிற்பது தெரிந்தது. சித்திக்காரிக்கு பதிலளிப்பதுபோல் அவனுக்கு பதிலளித்தான்.

“ஸார்ன்னு கூப்பிடாதிங்கம்மா... சத்தியமாச் சொல்றேன். உங்களைப் பார்க்கிறதுக்கும் கேட்கிறதுக்கும் எங்கம்மாவைவிட ஒசத்தியாவே நீங்க தோணுது... நான் இனிமேல் எந்தத் தப்பும் செய்யக்கூடாதுன்னு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா...”

மோகனன், செல்வாவை கண் தாழ்த்திப் பார்த்துவிட்டு, தலை தாழ்த்திப் போய்க் கொண்டிருந்தான். சித்திக்காரி, செல்வாவின் அறைக்குள் வந்தாள்.

“ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன். பெத்த தாய்கிட்ட பேசுறது மாதிரி பேசுறான். உனக்கு நான் தாய் மாதிரி. நீ என்னடான்னா, சொல்லப் பொறுக்கல... ஒன்னை திட்டுறதுக்கு எனக்கு உரிமை கிடையாதா?”

செல்வா, சித்தியின் கைகள் இரண்டையும் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, மாங்கு மாங்கென்று அழுதான்.

8

அன்றிரவு, சித்திக்காரியே, அவனுக்கு அறைக்குள்ளேயே தட்டோடு உணவை கொண்டு வந்தாள். “சாப்பிடுப்பா” என்று ஊட்டிவிடாத குறையாக, “டா”வை, “பா”வாக்கினாள் உடனே, சாப்பாட்டு மேஜையிலிருந்த குழந்தைகளும் தட்டுக்களோடு உள்ளே ஓடி வந்தன. சித்தியிடம் ஏற்பட்ட மாற்றத்தை புரிந்துகொள்ளும் நிலையில் செல்வா இல்லை. ஆனாலும், குப்புறக் கிடந்தவன், அவளுக்கு மரியாதை காட்டுவது போல் பரபரப்பாக உடல் நிமிர்த்தி எழுந்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அம்மா ஊட்டிய சாதத்தை குழந்தைகள் வேண்டா வெறுப்பாய் உண்டுவிட்டு, அண்ணனோடு தூங்கி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/173&oldid=1854322" இலிருந்து மீள்விக்கப்பட்டது