உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

புதைமண்

வளாகத்திற்கு முன்னால் மிகப்பெரிய கட்-அவுட் அதில், ஒரு வெள்ளைக்காரரின் மிகப்பெரிய உருவம். ஆங்கிலத்திலான வரவேற்பு வாசகங்கள். தமிழிலும் சில சொற்றொடர்கள்.

“மறுவாழ்வு கொடுக்கும் மணியே வருக! ஓரினச்சேர்க்கையின் உருவே வருக!”

மோகனனின் கார், அந்த வளாகத்திற்குள் வந்தபோது, மேலே கேட்கும் கூச்சலை கேட்ட செல்வா, இப்போது, ‘அய்யோ அய்யோ’ என்றான். உனக்கு எத்தனை தடவை சொல்றேன்... ‘உனக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது. காருக்குள்ளேயே கண்ணாடிகளை இறக்காமல் ஏ.சி.யை போட்டுக்கொண்டு பேசாமல் இரு. நான் பத்து நிமிடத்தில் வந்துடுவேன். தலையை மட்டும்தான் காட்டணும். மற்றதை காட்டுறது நாளைக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே, கார் கதவை திறந்து கொண்டு இறங்கினான் மோகனன். அப்போது, இன்னொரு கார் வந்து நின்றது. இவனுடைய காரைவிட இரு மடங்கு பெரிய கார். மும்மடங்கு பளபளப்பு. அந்தக் காரிலிருந்து செக்கச் செவேலென்ற ஒரு மனிதர் இறங்கினார். உடனே, அத்தனை பேரும் அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், எதேச்சையாக மோகனனை பார்த்துவிட்டார். கூட்டத்துக்கு உள்ளே ஊடுறுவி, அந்தக் கார் பக்கம் வந்து ‘ஹலோ’ என்று கை குலுக்கிவிட்டு, இடதுபக்க இருக்கையில் ஒடுங்கிக் கிடந்த செல்வாவை வைத்த கண் வைத்தபடி பார்த்தார். பிறகு, ‘யூ புராட் எ பிராப்பர் பாய்... தேங்ஸ் எ லாட்’ என்றார்.

மோகனன், அதிர்ந்து போனான். மரகத பச்சை சட்டையை, பொன் வண்ண பேண்டுக்குள் இன் பண்ணி சிவப்பு, டை கட்டி அழகாகத் தோன்றிய அந்த நாற்பது வயது மனிதர், உலக நிறுவனம் ஒன்றின் இயக்குநர். தங்கச் சங்கிலி காதில் தொங்க, மூக்குக் கண்ணாடி மார்பில் பதியத் தோன்றிய அந்த மனிதர், செல்வாவை பார்த்துக் கொண்டே மீண்டும் மோகனனிடம் குசலம் விசாரித்தார். மோகனனுக்குத் தெரிந்த அளவில், இன்று அவர் வருவதாக இல்லை. நாளைக்கு காலையில் பிளைட்டில் வரவேண்டும். இவன்தான், அவரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற ஏற்பாடு. இவர்தான் எங்கேயோ சினிமாக்காரர்களுக்குடையே உதிரியாய் சுற்றிக் கொண்டிருந்த இவனை, ஓரினச்சேர்க்கை மூலம் கரையேற்றியவரோ? கரைபடுத்தியவரோ...? இந்த நிலத்தையும், அதன் முகம் போன்ற கட்டிடத்தையும் உலக நிறுவனத்தின் சார்பில் வாங்கிப் போட்டவர். ஓரினச்சேர்க்கைக்காரர்களின் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் ஏகப்பட்ட பணம் அனுப்புகிறார் ஆனால் நடப்பதோ மறுவாழ்வு அல்ல. மருவாழ்வு. எல்லாம் இவருடைய சம்மத்தோடுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/184&oldid=1838578" இலிருந்து மீள்விக்கப்பட்டது