உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஒத்தை வீடு

கெஞ்சினாள்... ஆனால் உமா, கண்டுக்கவில்லை... ‘அந்நியன் பொருளைத் தொடுவது அவனை தொடுவது மாதிரிதானே... கற்பு கெட்டுப் போகாதா...’

உமா, வெளியே போய்க் கொண்டிருந்தபோது, மனோகர் எழுந்து வீட்டுக்குள் போகப் போனான். அவனையே பார்த்து நின்ற அக்காவின் தோளில் கைபோட்டபடியே, திண்ணைப் படியில் அவன் கால் வைத்தபோது, ஒரு மோட்டார் பைக் சத்தம்... உமாவின் கணவன் இந்திரன், இடது பக்கமாக ஒடிக்கப்போன பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு, உள்ளே வந்தான். உமாவை, ‘ஒனக்கென்ன இங்கே வேலை’ என்பது மாதிரி, எள்ளும் கொள்ளுமாய்ப் பார்த்தான். அவளை, அவன் பார்த்த தோரணை, உமாவைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வந்தவன்போல் தோன்றியதே தவிர, மனோகரை பார்க்க வந்தவன்போல் தோன்றவில்லை. ஆனாலும், கடித்த பற்களை விடுவித்தபடியே ஒப்புக்குக் கேட்டான்.

“என்ன மனோ... டில்லியில் பயிற்சி எப்படி இருந்தது...”

“உட்காருங்க இந்திரன் ஸார்... பயிற்சி... பொல்லாத பயிற்சி...”

“உமா... வீட்டுக்குப் போ... அம்மா தேடுவாள்... அப்போ பயிற்சி பயனில்லன்னு சொல்றீங்க...”

“அரசாங்கத்திலே இந்தப் பயிற்சி என்கிறதே ஒரு ஏமாத்து நாடகம்... மேலிடத்துக்குப் பிடித்தவங்க அதை... கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்கிறவங்க... ரிட்டயர்டாகிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்ன கூட வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போவாங்க... வேண்டாதவங்கள கழித்துக்கட்ட உள்நாட்டுப் பயிற்சின்னு அனுப்புவாங்க...”

“நீங்க எந்த வகையில சேர்த்தி...?”

“இரண்டுலயும் சேர்த்தி இல்ல... எங்க சர்வீஸ் அதிகாரிங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதுக்குன்னு டில்லியில் ஒரு நிறுவனம் இருக்குது... இப்போ பயிற்சியாளர்கள் அதிகமாகவும், பயிற்சி பெறுகிறவங்க குறைவாகவும் ஆகிப் போச்சு... ஆள் பஞ்சம். இதனால் என்னை வரச்சொல்லிட்டாங்க... ஆனாலும் சும்மா சொல்லப்படாது... தமிழக அரசின் இல்லத்தில் ஏஸி ரூம்... அருமையான சாப்பாடு. தகராறுக்கு வராத ஆட்டோ டிரைவர்... அப்புறம் சைட் அடிக்கிறதுக்கு ஏகப்பட்ட அழகிகள்...”

மனோகர், குரலைத் தாழ்த்திப் பேசியபோது, இந்திரன், உமா போய்விட்டாளா என்று கண்களைச் சுழற்றி ஒரு தாவு தாவி விட்டு, கிசு கிசுப்பாகக் கேட்டான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/21&oldid=1837165" இலிருந்து மீள்விக்கப்பட்டது