உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

புதைமண்

கவிதா, சூழலை எளிமைப்படுத்த நினைத்தபோது, அவன் கடுமைப்படுத்தினான்.

“ஒன்னால நான் பட்டது போதும். நீ ஒரு புழுகிணி... மோசடிக்காரி... கூட்டிக் கொடுக்கிறவள்... போடி...”

கவிதா, இந்த மாதிரி வார்த்தைகளை எப்போதும் எவரிடம் வாங்கி அறியாதவள். அவன் கோபம், அவளையும் தொற்றிக் கொண்டது.

“லுக் மிஸ்டர் செல்வா! நீங்க என்னை வெறுக்கிறதனால, நான் செத்துடமாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். ஆனால், உயிருக்கு உயிராய் பழகிய என்னை ஏன் வெறுக்கிறீங்க என்பதற்கு காரணங்களை கேட்க, எனக்கு உரிமை உண்டு. நீங்க சொல்லித்தான் ஆகணும்.”

“சொல்றேன். உன்கிட்ட, என் மனசே நினைக்க பயப்படுற அந்தரங்கங்களை, சொன்னேன். ஆனால், நீ இப்போதைய உன் அம்மா, ஒரு டூப்ளிகேட் என்கிறதை சொல்லல.”

“வயசுக்கு வருகிற பருவத்துல இருக்கிற மகளையும், நன்றாக படிக்கிற மகனையும் விட்டுட்டு, ஒருத்தி ஓடிப் போறான்னா... அவள், அம்மா இல்ல. பச்சைத் தேவடியாள். ஆனால், என் அப்பாகிட்ட வந்தவள் குழந்தை குட்டி இல்லாதவள். எங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தவள், எனக்கு அம்மாவாகிப் போனாள். நீங்கள் சொல்கிறீர்களே டூப்ளிகேட் அம்மா, இந்த அம்மா என்னை பெற்ற அம்மாவைவிட பல மடங்கு பெரியவள். அம்மா என்றால் எனக்கு இவள்தான். இந்த அம்மாவை உங்களிடம் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த அம்மாவா? நீங்களா? என்றால் எனக்கு இந்த அம்மாதான் முதலில். அவளால்தான், என் அப்பனின் ஆடாத ஆட்டத்தை சகித்துக் கொண்டிருக்கிறேன். நான் போட்ட நகைகள் பொதுச்சொத்து. அதனால், என் அம்மாவின் ஆலோசனைப்படி அப்பனை கழட்ட முடியாது என்பதால், நகைகளை கழட்டி விட்டேன். இதுதான் நீங்கள் என்னை வெறுப்பதற்கு காரணம் என்றால், நீங்கள் தாராளமாக என்னை வெறுக்கலாம்.”

“இதுகூட எனக்குப் பெரிசில்ல... நாலு நாளைக்கு முன்னால என்னை பார்க்கிறதுக்காக கெட்டுப் போகாத பிரிட்ஜ் சாக்குல வரத் தெரிந்த உனக்கு. அதே மாதிரி ஏதாவது ஒரு சாக்கில எங்க வீட்டுக்கு வந்து, நீ டூரில் ஒழியறதை சொல்லியிருக்கலாமே.”

“கதவு மூடி இருந்தால் வரவேண்டாமுன்னுதான் சொல்லியிருந்தேனே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/218&oldid=1838985" இலிருந்து மீள்விக்கப்பட்டது