சு. சமுத்திரம்
21
“ஏதாவது சிக்கிச்சுதா பிரதர்...? எனக்கு சல்வார் கம்மீஸ்களை ரொம்பப் பிடிக்கும்...”
“இதுல ஒரு வேடிக்கை தெரியுமோ இந்திரன் ஸார்... டில்லிப் பஸ்ல அடித்துப் பிடித்து உட்காருவீங்க... ஒருத்தி, அதுவும் அழகான இளம் பெண்... பொத்துன்னு ஒங்க இருக்கைப் பக்கம் உட்காருகிறாள்... உங்களை நெருக்கியடித்துக் கிடக்காள்... தோளில் தோள் படுது... கையிலே கை படுது... ஆனால் நீங்க ஆயிரத்தெட்டு ஆஸ் தொல்லையால, அவள் உட்கார்ந்ததையே கவனிக்கல... அவள் ஆர்.கே. புரத்துல இறங்குறாள்... இறங்குன இடத்துல, இன்னொருத்தி ஏறுறாள். ஒங்க இருக்கைப்பக்கம் இடைவெளிவிட்டு உட்காருறாள்... நீங்க உஷாராகுறீங்க... பக்கத்துல ஒரு அழகுப் பெண் இருக்கிற கித்தாப்பு... ஒங்களுக்கு வந்துடுது... அவளைத் தொடாமலேயே பரவசமாகிறிங்க... உடனே அந்தப் பெண், திடுக்கிட்டு உங்களை முறைக்கிறாள்... பஸ் மோதி பாக்கு என்கிற இடத்துல நிற்கும்போது, வேற ஒரு சீட் காலியாயிடுது... அதுல போய், உட்காருகிறாள்... இதுக்கு என்ன அர்த்தம் ஸார்...? இதுக்குப் பேர்தான் டெலிபதியோ... இதுக்குப் பேர்தான் உள்ளுணர்வோ... ஆச்சரியமாய் இருக்குதுல்ல...”
இந்திரன் ஒரு கண்டுபிடிப்பைச் சொல்லப் போனபோது, சங்கரி திண்ணைக்கு வந்து அறிவித்தாள்...
“வெந்நீர் ரெடி காப்பி குடிக்கிறீங்களா ஸார்...”
“நோ தேங்ஸ்... சாப்பாட்டுச் சமயம் பாருங்கம்மா... அப்புறம் ஒங்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பரீட்சை ரிசல்ட் வந்ததும், என்கிட்டச் சொல்லுங்க... கமிஷன்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க... இன்கம்டாக்ஸ், என்போர்ஸ்மெண்ட், சி.பி.ஐ., இப்படிப்பட்ட பவர்புல் டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங்க போடச் சொல்றேன்...”
“எந்த டிபார்ட்மெண்ட்ல வேணுமுன்னாலும் போட்டுட்டுப் போகட்டும்... முதல்ல பாஸாகிறேனானு பார்ப்போம்...”
“நீங்க பாஸாகாட்டால், யாருமே பாஸாக முடியாது... எங்க உமா மாதிரியா நீங்க...? சரியான மக்கு... இரண்டு தடவ எழுதியும் தேறல... நீங்க... மனோகர் மாதிரி கிளாஸ் ஒன் சர்வீஸ் எழுதணும்...”
“நீங்க மட்டும் இன்டெலிஜெண்ட் இல்லியா... இவர மாதிரி... நீங்களும் எழுதி இருக்கலாமே...?”
“புத்தியைக் கடன் கொடுத்துட்டேன்... சம்பளத்தை நம்பி மோசம் போயிட்டேன்... கழுதை மேய்த்தாலும் சர்கார் கழுதையை மேய்க்கணும் என்கிறது மறந்து போச்சு...”