உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

229

சகஜந்தான்... சாதாரணமானது என்று காட்டும் தோரணை... சிற்சில சமயங்களில், லேசாய் அதிர்ந்த பார்வை.

டாக்டர். சத்தியா, அவன் சொன்னவற்றை தற்காலிகமாக ஒதுக்கி வைத்ததுபோல், செயல்பட்டாள். உடம்பையும், மனதையும் எப்படி ஆசுவாசப்படுத்திக் கொள்வது என்பதை நாற்காலியில் இருந்தபடியே செய்து காட்டினாள்.

பரந்து விரிந்த பெரிய அறை. சித்தப்பா வீட்டு படுக்கை அறையையும், செல்வா, குழந்தைகள் அறையையும் விழுங்கிவிட்டு, பாதி வயிறு நிறைந்தது போல் இருக்கும் அறை. தென் முனையில் சுவரோடு சுவராக ஒரு ஒற்றைப் படுக்கை. இருபக்கமும் தேக்குக் குமிழ்களைக் கொண்ட கட்டில். இதன் எதிர்ச்சுவரில், ‘நம்முடைய அணுகுமுறையே நம்மை தீர்மானிக்கிறது’ என்ற வாசகப் பொறி. பளபளப்பான மரப்பலகையில் இடம் பெற்றிருந்தது. கட்டிலின் வடமுனையில் கால்களுக்கு மேலே இன்னொரு பச்சை பலகை. அதில், ‘அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை’ என்ற அப்பர் பிரானின் மேலாண்மை வரிகள், வெள்ளை வரிகள்.

மனோதத்துவ நிபுணர் டாக்டர் சத்தியாவின் வேண்டுகோள்படி, அவளிடம், செல்வா, எல்லாவற்றையும் ஒப்பித்துவிட்டான். அவளைப் பார்க்க பார்க்க, இவன் பதட்டம் பரவசமானது. சுமார் முப்பது வயதுக்காரி. அசல் கிராமத்து அக்காவின் நகர்ப்புற வார்ப்பு. மனிதச் சதையாலும், எலும்பு நரம்புகளாலும் கடைந்தெடுக்கப்பட்டது போன்ற உடல். நெற்றியில் உச்சிக்கு சிறிது கீழேயும், நடுவிலும் இரண்டு நிசமான குங்குமப் பொட்டுக்கள். புருவ மத்தியில் ஒளி சிந்தும் முத்துக்களால் ஆனது போன்ற அம்பு வடிவப் பொட்டு. அரவிந்தர் ஆசிரமத்தின், அந்த அன்னையின் லேமினேட்டட் புகைப்படம் மேஜையின் பின் சாய்வோடு இருந்தது. அன்னைக்கு தீட்சண்யமான பார்வை. திடப்படுத்தும் நோக்கு. எல்லாமே அன்பு மயம் என்ற போக்கு.

செல்வா, அந்த கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தான். டாக்டர் சத்தியா, அவன் அருகே சென்றாள். டாக்டர் என்றால் ஸ்டெதாஸ்கோப் டாக்டர் அல்ல. மனோதத்துவத்தில் வாங்கிய டாக்டர் பட்டக்காரி. செல்வாவை சிறிது நேரம் பார்த்தாள்.

அவனோ, இதுவரை படுத்தறியாத சுகமான கட்டிலில், அதன் மெத்தையோடு பறப்பதுபோல், கிடந்தான். மயிலிறகால் செய்தது போன்ற மெத்தை. மேலேயும் கீழேயும் அவனை மென்மையாய் தாலாட்டியது. தானும் ஆடிக் கொண்டது சத்தியா, ‘நான் சொன்னது மாதிரியே நீ செய்து காட்டணும்’ என்று சொல்லிவிட்டு, அவன் தலைப்பக்கம் வந்தாள். அந்தக் குரல், ஆகாயத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/229&oldid=1839254" இலிருந்து மீள்விக்கப்பட்டது