சு. சமுத்திரம்
231
ஆசுவாசப்படுத்துங்கள். இரண்டு மையங்களாக உள்ளங்கைகளில் செய்தாயிற்று. இனிமேல் இதர பதினாறு மையங்களில் பாரத்தை ஒப்படையுங்கள்.”
செல்வா, அந்த அம்மா, முன்னர் சொல்லிக் கொடுத்ததுபோல், தனது அத்தனை பாரங்களையும் பதினாறு மையங்களில் ஒற்றையாகவும், ரெட்டையாகவும் ஏற்றி, அவற்றை கனக்க வைத்தான். பிறகு, அந்த பாரங்களை இறக்கி, அவற்றை லகுவாக்கினான். கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆயிற்று. சத்தியா, கேட்டாள்.
“இப்போ எப்படி இருக்குதுப்பா?”
“உடல் காற்றில் மிதப்பதுபோல் இருக்கிறது மேடம். மனம் என்ற ஒன்று இல்லாதது போல் தோணுது மேடம்.”
“நல்ல அறிகுறி. ஆனால், ஒரு எச்சரிக்கை. கவிதாவோடு, நான் சொல்வது வரைக்கும், பழகவேண்டாம். அப்புறம், வட்டியும் முதலுமாய் பழகலாம்.”
“பழகவே முடியாது மேடம்...”
“முடிய வைக்கிறேன். சரி... அடுத்த வாரம் இதேநாள், இதே நேரம் வாங்க... நான் சொல்லிக் கொடுத்த பயிற்சியை, அன்றாடம் செய்யுங்க... நீங்க போய்ட்டு, கவிதாவை வரச்சொல்லுங்க...”
செல்வா, சிறிது மிடுக்கோடு எழுந்தான். அந்த அம்மாவை, தன் அம்மாவைப் பார்ப்பதுபோல் பார்த்தபடியே, வெளியேறினான்.
17
டாக்டர். சத்தியா, குறிப்பிட்ட அதே வாரம், அதே நாளில், அதே நேரத்தில், செல்வா, அவளைச் சந்தித்தான். அவள் கேட்கும் முன்பே, ‘இப்போ பரவாயில்லை மேடம்...! என்னை நானே வெல்ல முடியும் போலத் தோணுது’ என்றான். உடனே அவள், ‘அழகாய் பேசுறீங்களே... அப்புறம், கவிதா எப்படி இருக்காள்?’ என்று போகிற போக்கில் கேட்கிறவள்போல் கேட்டாள்.
“பொதுப்படையாய் பேசிக்குவோம் தனித்து சந்திக்கல ஆச்சரியமாய் இருக்கு... அவளும் மாறிட்டாளோ என்னமோ...?”