உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஒத்தை வீடு

அணைக்கிறான். இருளில் நடக்கிறான். அவள் மேல் படர்கிறான்... அங்குமிங்குமாய்ப் புரள்கிறான்... புரண்டதுதான் மிச்சம். அவன் புரண்டதில் கட்டில் சட்டத்தில் குடிக்காமல் வைக்கப்பட்ட அந்த பால்குவளை, கீழே விழுகிறது. பால் தரையில் வீணாய் ஓடுகிறது. அவன் குடிக்காமலும், அவளுக்கு கொடுக்காமலும், கெட்டுப் போகாமலேயே கொட்டிப் போகிறது... அப்புறம் சாக்கு சொல்கிறான்... கல்யாணக் காரியங்களை, தனியொரு ஆண் பிள்ளையாய் மேற்கொண்டதால், அலுப்பு என்றான்... நாளை இரவுதான் முதலிரவு என்கிறான்... அவளும் நம்புகிறாள்... நாளைதான் வரவில்லை. ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக அமாவாசைகளே வந்தன...

சங்கரி, பால்கனிக் கதவைக் கோபத்தோடு சாத்திவிட்டு, உள்ளே போகிறாள்... கதவுச் சத்தம் கேட்டோ என்னவோ... எதிர் பால்கனியில் விளக்கு எரிகிறது. இந்த அறையின் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே ஒளிக்கற்றையாய் ஊடுருவுகிறது. கட்டிலுக்கு வந்தவள், படுக்கையில் குத்துக்காலிட்டு, அதில் முகம் போட்டுக் கிடப்பவனைப் பார்த்துத் திடுக்கிடுகிறாள்... அவனைப் பார்க்கப் பார்க்க, கோபம், பரிதாபத்துக்கு விட்டுக் கொடுக்கிறது. படுக்கையில் உட்கார்ந்து அவனைக் குண்டுக்கட்டாய் வளைத்துப் பிடித்து, “தூக்கம் வர்லியா...?” என்றாள்.

மனோகர், பதிலளிக்கவில்லை... அவன் மனதில், சுய-இரக்கம் போய், கோபம் வருகிறது... மனதில் பல்வேறு யூகங்கள் நிழலாடுகின்றன. அந்த நிழல்களே, நிஜமாகி நெருப்பாய் எரிகின்றன... அவளைப் பார்க்கும் கண்கள், நெருப்பாய் கக்குகின்றன. எதிர் வீட்டு விளக்கு, அவனை நெருப்பாய் எரிக்கிறது.

3

இரவு, பகலுக்கு விட்டுக் கொடுத்தாலும், மனோகரும், சங்கரியும் தத்தம் உள்ளுலகங்களில் மூழ்கிக் கிடந்தார்கள். அவன் மரக் கட்டையாய், மல்லாக்கக் கிடந்தான். அவளோ கள்ளிச் செடியாய்ச் சுருண்டு கிடந்தாள். நிசப்தம் கலைத்த சேவல்கள் கொக்கரக்கோவும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், பத்திரிகைகள் விழுந்த டொக் டொக் சத்தமும். கை பம்புகளின் டப்... டப் சத்தமும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலவி, ஒருவித கலவைச் சத்தத்தை எழுப்பின. இத்தகைய சப்தங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/35&oldid=1851498" இலிருந்து மீள்விக்கப்பட்டது