40
ஒத்தை வீடு
“ஏன் இப்படி ஒரு மாதிரி ஆயிட்டே? ஏன் கண்ணு அப்படிக் கலங்குது? இங்க பாரு சங்கரி! எதையும் மனசுக்குள்ளே கல்லு மாதிரிப் போட்டு வச்சா, அதுவே அப்புறம் பிளட் பிரஷரா... நீரிழிவா... வயிற்றுக் கோளாறா... ஏன் பைத்தியமாக்கூட... மாறுமுன்னு, எங்க வீட்டு மிஸ்டர் சொல்லுவார்... மனசுல என்ன இருந்தாலும், அதைக் கவுத்து வாயாலே கொட்டிடு... ஒன்னோட பிரச்சினை காதல் தோல்வியா? இதனால, அவருக்கு இடங்கொடுக்க மனசு வரலயா? காதல் தோல்வி சகஜம்... நான் கூடத்தான் காதலிச்சிருக்கேன்... இப்ப உண்டாகலியா. பழச மறக்க முடியாதுதான்... அதுக்காக புதுச உதரணுமா என்ன...?”
சங்கரி, குமுறினாள். ‘காதலே இல்லாத போது, அது எப்படி தோல்வியாகும்? இந்தப் பழியோட நான், இடங்கொடுக்கல என்கிற இன்னொரு பழியா... கடவுளே... கடவுளே...’
உமா, தொடர்ந்தாள்.
“ஒருவேளை உன் வீட்டுக்காரருக்குக் காதல் தோல்வியா? அதனால் ஒன்ன விட்டு ஒதுங்குறாரா... ஒன் மேல எரிஞ்சு விழுகிறாரா... எதுனாலும் சொல்லு இவளே... பெரியவங்க எதுக்கு இருக்காங்க...”
சங்கரி, முட்டிக் கால்களில் முகத்தை அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டு, வயிற்றுக்கும் கால்களுக்குமான இடைவெளியில், வாயை மூடிக் கொண்டாள். ‘அந்த ஏலாமனிதர் மீதும் ஒரு பழியா...?’
அவள் உடம்பு குலுங்கியது... தொண்டைக் குமுறல், வாய் மூடிக் கிடந்ததால், அது பிடறி வழியாய்ப் பிய்த்துக் கொள்ளப்போனது... உமா, அவளை தன் மடியில கிடத்தினாள். அவ்வளவுதான்... சங்கரி, அவள் மடியில் புரண்டு புரண்டு அலைமோதினாள்.
உமா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, பேச்சை விட்டாள்.
“அழாதடி அழாதே மனகக்குள்ளே வச்சுக் குழப்பாதே... என்கிட்டயாவது சொல்லு... பெண்ணுக்குப் பெண்... தோழிக்குத் தோழி. போதாக்குறைக்கு ஒன் மாமியார் வேற, ஒன்மேல பழி போடறாள் உன்கிட்ட இருக்கிற உண்மை ஒருத்தர் கிட்டயாவது போனாத்தான், அது உன்னைச் சுடாது... என்கிட்ட நம்பிக்கை இருந்தாச் சொல்லு... அப்புறம் ஒன்னிஷ்டம்.”
சங்கரிக்கு, சொல்லவும் முடியவில்லை... சொல்லாமலும் இருக்க முடியவில்லை... தலைவெடித்து விடும் போல் இருந்தது. உடலைக்