சு. சமுத்திரம்
49
“என் மேலேயே எதிரம்பு விடுறியா...? சந்தோஷம்... சும்மா சொல்லலே... நிசமாவே சந்தோஷம்... வாயுக் கோளாறு... அது இருக்கிறது வரைக்கும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும்... இதை அலோபதிக்காரன் கணக்கில் எடுக்காதது தவறு... பெருந்தவறு... ஆனால் உனக்கு வாயுக் கோளாறு இருக்கிறதாய் நாடி சொல்லல... நீ உண்மையின் விபரீதத்தைச் சந்திக்கப் பயந்து, அப்படி நினைக்கிறே... விந்து விட்டவன்... நொந்து கெட்டான் என்பது பழமொழி... அப்படிப் பட்டவனை, ஒரு கோழி முடியைக் காட்டியே பயமுறுத்திடலாம்... குரு பரசுராமருக்கும், சிஷ்யன் பீஷ்மருக்கும் ஏற்ப்பட்ட போரில் பீஷ்மர் வென்றார்... குருவிடம் இதற்குக் காரணம் கேட்டார்... பரசுராமர் என்ன சொன்னார் தெரியுமா... பீஷ்மா... ஒன் பிரம்மச்சரியம் என்னைத் தோற்கடித்தது... என்றார். நம்ம மாதிரி சாதாரண ஆட்கள் கடைசிவரைக்கும் பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டியதில்லை... ஆனால் கல்யாணம் வரைக்கும் விரதம் இருந்தால்... அதற்குப் பிறகு விரும்பறதை பலமாய்ச் சுவைக்கலாமே... ஒன்னால் முடியாதே... பாவம்... ஒன் வீட்டுக்காரி...”
மனோகர், புழுவாய் நெளிந்தான். சிறு பிள்ளையாய்த் துடித்தான்... சங்கரி, அவன் முன்னால் வந்து ஒப்பாரி போடுவது போல் ஒரு பிரம்மை... அப்புறம் அவள், கைதட்டிச் சிரிப்பது போல் ஒரு கொடுமை... அந்தச் சமயத்திலும் ஒரு சிந்தனை... ஆசாமி, இப்படி பயமுறுத்துறது வியாபாரத் தந்திரமாய் இருக்குமோ... இருக்கிறது மாதிரித் தெரியலியே... தோரணை, பேச்சு, துஷ்டனுக்கு உரியதாய்த் தோணலியே... விளம்பரப் பலகையில் டாக்டர் என்று போடாமல் வைத்தியர் என்று போட்டுக் காட்டும் மனிதரிடம், இப்படிப்பட்ட வில்லத்தனம் இருக்குமா... இருக்காது...
வைத்தியர், எழுந்தார் நாற்காலிக்குப் பின்பக்கம் திறந்த பலகை அலமாரியில், வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட லேகியப் பாட்டில்களில் ஒரு சின்னப் பாட்டிலை எடுத்தார்... சிறிது நடந்து, மேற்குப் பக்க சுவரோர கண்ணாடி அலமாரியைத் திறந்து, ஒரு சின்னக் குப்பியில் உள்ளதைக் கொட்டிக் கொட்டி, முப்பது சின்னச் சின்ன சரிகைக் காகிதங்களில் நிரப்பினார்... நிரப்பியதை மடித்துக் கொண்டு வர அவருக்கு முப்பது நிமிடமாயிற்று. நிலையற்றுக் கிடந்தவனிடம் திரும்பி வந்தார்... பாட்டிலையும், பஸ்பத்தையும் வைத்தார்...
“பணம்...”
“நூறு ரூபாய்...”