50
ஒத்தை வீடு
மனோகர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலேயே, சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு, அவனுக்கு வைத்தியத்தை வர்ணித்தார்.
“சித்தர்கள், கட்டளைப்படி, நானே தயாரித்த மருந்து... ஒரு கரண்டி லேகியத்தையும், இந்த காகிதத்தில் இருக்கிற பஸ்பத்தையும் கலந்து சாப்பிடு. தினம் மூணு வேளை. ஆறின பாலைக் குடிக்கணும் சாப்பாட்டிற்குப் பிறகுதான்... போட்டுக்கணும்... ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ, காபி, டீ குடிக்கப்படாது. பத்து நாளைக்குப் பல்லைக் கடித்து, பெண்டாட்டியை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது... இந்த மருந்து பலிக்காட்டி, எந்த மருந்தும் பலிக்காது... பலன் கொடுத்தால், பதினோராவது நாள் என்னை வந்து பாரு... போய் வா...”
மனோகர் பேசாமலேயே நின்றான்... அவரையே உதடுகள் துடிக்கப் பார்த்தான்... அவர் அவன் பக்கமாய் வந்து, அவன் கையைப் பிடித்தபடியே அறிவுரையாற்றினார்...
“பெண் என்பவள் சக்தி... சக்தியைத் திருப்திப்படுத்த எந்த ஆணாலும் இயலாது... அவளாய்த் திருப்திப்பட்டால்தான் உண்டு... பெண்ணிடம், ஆண் ஒடுங்க வேண்டும்... இதுதான் சித்த வைத்தியத்தின் கோட்பாடு... இதனால்தான் சித்தர்கள், மருந்துப் பொருட்களை தாய் சரக்கு, தந்தை சரக்கு என்று பிரித்தார்கள். தாய் சரக்கில் தந்தைச் சரக்கு மடிந்தால்தான் மருந்து கிடைக்கும்...”
“உதாரணமாய், கந்தகம் தாய்ச் சரக்கு... பாதரசம் தந்தைச் சரக்கு... பாதரஸத்தை பஸ்பமாக்கி, அதை கந்தகத்தோடு சேர்த்து அரைக்க வேண்டும். இதனால் பாதரசம் மாண்டு, கந்தகத்துடன் இணைகிறது. சத்ரு எதிர்நிலை கொண்டது. சத்ரு... தாய் நன்மை தரும் மித்ரு... மித்ருவைக் கொண்டு, சத்ருவை மடியச் செய்யவேண்டும். சத்ருவான விந்தை, மித்ருவான நாதத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்... அதுவே தாம்பத்ய உறவு... ஆகையால் இந்த உறவில் மனைவியை அடக்க நினைக்காதே... அடங்க நினை... இப்படிச் சொல்வதால், மனைவியை அவள் போக்கில் அடாவடியாய் விடலாம் என்று இல்லை... அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் அவளைப் பப்ளிக்காய் அடக்கணும் ஆனால், பிரைவேட்டாய் அடங்கணும்... போகட்டும்... எனக்கு என்ன வயது இருக்கும்..?”
“எழுபது.”
“என் வயது எண்பது... இன்னும் ஒரு பல் போகல கண்ணுக்கு கண்ணாடி போடல. ஏன் இளமையிலேயே கட்டுப்பாடான