சு. சமுத்திரம்
57
போகும்போது பேன்ட் பை உப்பி இருந்ததைப் பார்த்தவள். அதுவே இப்போது நாத்தனார் கொண்டையை உப்ப வைத்திருந்தது கண்டு ஆனந்தித்தாள். தம்பியையும், தம்பி மனைவியையும், இருவர் தோளையும் அழுத்தி சின்னச் சின்ன சதுரப்பாய் இருக்கைகளில் உட்கார வைத்தாள். பரிமாற எழுந்த சங்கரியை, கண்ணால் அதட்டி உட்கார்ந்த இடத்திலேயே உட்கார வைத்தாள். முட்டைப் பாயாசம் போடாமல் போனோமே என்று, தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டாள். நெத்திலிக்கருவாடு குழம்பு... முருங்கைக்காய் சாம்பார்... எண்ணைக் கத்தரிக்காய்ப் பொரியல்... இருவரும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
மனோகரும், சங்கரியும் ஈரக் கைகளைத் துடைத்தபடியே ஜோடியாய் மாடிப்படிகளில் ஏறப்போனபோது, மாமியார் மகனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்... அக்காவுக்கு உதவப் போறியா இல்லியா... அந்த வண்டிப் பாதையை தடந்தெரியாம அழிக்கப் போறியா இல்லியா... ராமசாமிப்பயல ஜெயிலுல போடப்போறியா இல்லியா... இப்பவே எனக்குத் தெரிஞ்சாகனும்... உன்னால முடியாட்டா, நான் ஊருக்குப் போகப்போறேன்... என்று கத்தோ கத்தென்று கத்தினாள். காந்தாமணியோ, அம்மாவை ஒப்புக்குத் திட்டுவது போல் திட்டினாள்.”
சங்கரிக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல். அந்தச் சிவபூஜைக் கரடிகளை கண்களால் எரித்துவிட்டு, சலிப்போடு மாடிக்கு வந்தாள். மொட்டை மாடியில் அங்கும் இங்குமாய் சுற்றினாள். கீழே சத்தம் கத்தலாகியது. அந்தக் கத்தலை மீறி தெற்குப்பக்க வீட்டு மாடியில் ஒரு முக்கல் முனங்கல். ‘என்னை விட்டுடு... எவ்வளவு நேரமுய்யா...? வாட்ச்மேன் வந்திடப் போறான்... அட விடுய்யா... இந்தா பாரு... நான் அப்புறம் வரவே மாட்டேன்...’
சங்கரி, மொட்டை மாடியின் மதில் சுவர் விளிம்பில் கை ஊன்றி எதிர்ப்பக்கத்து வீட்டை ரசனையோடு பார்த்தாள். இவள், இந்த வீட்டுக்கு வந்தபோது, காலியாக இருந்த மனை, இப்போது அடுக்கு மாடி கட்டிடமாகிக் கொண்டிருந்தது. முதல் மாடியில்தான், இந்த அமர்க்களம். ஒரு மரத்தில் தங்கும் பறவைகள் போல் கீழ்த்தளத்தில் தொழிலாளர்கள் தங்கியிருக்கிறார்கள். ‘அவன், வேறு ஏதோ ஒரு கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘பெரியாள்’... அவள், இந்தக் கட்டிடத்தில் வேலை பார்க்கும் ‘சித்தாள்’ வாரம் இரண்டு தடவை நடக்கும் கூத்து இது. இவள் சாப்பிடப் போவதற்கு முன்பே அந்த கட்டிட முதல் மாடியில் சத்தம் கேட்டது. இன்னுமா முடியல... அடே யப்பா... எப்படி இவ்வளவு நேரம்... உமா