72
ஒத்தை வீடு
போல் பின் தொடரவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் ஆயிரத்தைக் கண்டவர்கள்போல் அத்தோடு விட்டு விட்டார்கள். மனோகருக்குத்தான் மனம் கேட்கவில்லை. கொளுத்தும் வெயிலிலும் கிளுகிளுப்புச் சுகம் கொடுக்கும் குளிர்சாதன அறையும், மணி அடித்தால் மண்டியிடுவதுபோல் அலுவலர்கள் வருவார்கள். அலுவலர்களும் இன்டர்காமில் பேசினால், ஆயிரம் குழைவுகளோடு எவளாவது ஒருத்தி வருவாள். ஆனால், இப்போதைய நிலை...’
‘ஒருத்தியிடம் பேடி... இன்னொருத்தியிடம் பொம்பளைக் கள்ளனாய்... இது என்ன ரெட்டை வேடம்...? இதில் எது வேடம்...? எது மூலம்...? இதற்கெல்லாம் யார் காரணம்...? சங்கரி... சங்கரியே... அவள் மட்டும் அழகாயிருந்து, பிற ஆண்களிடம் அளவோடு பழகி... தன்னிடம் பெண்மை குலுங்க நடந்திருந்தால்... இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நீலம் நேரடியாய்ச் சொன்னதை சங்கரி மறைமுகமாய்ச் சொன்னாள். எவனயாவது இழுத்துட்டுப் போவாளாமே... போகட்டும்... அதைப் பார்க்க இருக்கக் கூடாது. செத்துப் போகணும்... தற்கொலையாய் உடம்பைச் சிதைக்கணும்...’
மனோகர், நடுச்சாலையில் நடந்தான். கிறீச்சிட்டு நின்ற பல்லவனுக்குள் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் ஜனநாயகக் கூட்டணி அமைத்து இவனைத் திட்டினார்கள் ‘காலையிலேயே குடிச்சிட்டு ஆடுறியே... நீ மனுஷனாடா...?’
மனோகர், குடிகாரனாய் நடந்தான். எதிரே தென்படும் ஆட்டோக்களில் ஒன்றை நிறுத்தி வீட்டுக்குப் போகலாம் என்ற சுரணைகூட இல்லை. அந்த வீட்டின் நினைவு கூட இல்லை. வீடற்றவனாய், நாடற்றவனாய், தனக்குத்தானே அற்றுப்போனவனாய் அந்தச் சாலையில் நடந்தான். எவளோ ஒருத்தி முன்னால் போனாள். பின்பக்கத்தை வைத்து அனுமானிக்க முடியவில்லை! அவனுக்குள் ஒரு வேகம். மனம் அவளைச் சுமைதாங்கியாய்ப் பார்த்ததோ என்னமோ... அவளுக்கு இணையாக நடந்தான். அவளை, இணையாய்ப் பார்த்தான் மின்னும் கருப்பி... காதுகளைப் பாதி மூடும் சுருள் சுருளான தலைமுடி... அவளும் அவன் பக்கத்திலேயே நடந்தாள். இவன், ‘இன்னும் சூரியனே உதிக்கலே... இப்பவே இப்படி எரியுது...’ என்று தன் பாட்டுக்குச் சொல்வது போல் சொன்னபோது, அவள் ஏறிட்டுப் பார்த்தாள்... காறித்துப்பினாள்.
மனோகர், யாரையோ தேடுவது போல் அங்கும் இங்குமாய்ப் பராக்குப் பார்ப்பதுபோல் பார்த்தான் சாலையின் மறுபக்கம் அவனது நண்பன், நடந்து கொண்டிருந்தான் மிடுக்கான நடை இவனோடு மிசௌரியில் குப்பை கொட்டிய ஐ.பி.எஸ் இப்போது