உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ஒத்தை வீடு

இதற்குள், தெரு ஓரத்தில் கடாமுடாச் சத்தம். சங்கரி, இந்திரனுக்காக மூடிவைத்த பால்கனிக் கதவை திறந்தாள். அவன், தன்னை ஒரு மாதிரி பார்த்திருக்க முடியாது... அப்படிப் பார்த்திருந்தால் அண்ணியின் நிர்பந்தத்தில் வேண்டா வெறுப்பாய் அவன் வீட்டுக்குப் போனபோது, வசனம் பேசியிருப்பான் உஷாராயிருக்கலாம் அதுக்காக சந்தேகப்படக் கூடாது என்ன சத்தம்... குனிந்து பார்த்தாள்.

மாமியார் முழங்கினாள். ‘நீ ஒரு அற்பக் காய்கறிக்காரன்... எனக்குப் பதில் சொல்லாம எப்படிடா போகலாம்... நான் என்ன நாயா... குலைச்சா குலைக்கட்டுங்கிற மாதிரிப் போறே...’

“ஹலோ. உங்களைத்தான்...”

சங்கரி நிமிர்ந்தாள் எதிர் பால்கனியில் இந்திரன். அவன் பார்வை அண்ணியோடு போகும் போது பார்த்த பொதுப் பார்வையாக இல்லை. பொலிகிடா மாதிரி பல்லை இளித்தான். அவள் கண்களை உயர்த்தி கழுத்தையும் முகத்தையும் நிமிர்த்தியபோது, அவன் ரகசியக் குரலில் கேட்டான்.

“உங்களுக்கு வேலை கிடைத்துட்டாமே. அதுக்காக உங்களை பாராட்டறதா... இல்லை நீங்க படுற பாட்டுக்கு அனுதாபப்படுறதான்னு புரியலே. நீங்க அன்றைக்கு மாமரத்துக்கு கீழே சொன்ன விபரத்தை உமா எங்கிட்டே சொன்னாள்... பாவம்...”

சங்கரியின் கண்கள் உள்நோக்கிப் பாய்ந்து தொண்டைக்குள் போவது போல் இருந்தது. கை கால்கள் ஆடின. ஒரு நிமிடம்தான். கண்கள் உள்ளே ரத்தத்தில் மூழ்கி மீண்டும் விழிகளுக்குள் வந்தன. கால்களும் கைகளும் போராளியைப் போல் வைரப்பட்டன. அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் அதையே அவன் ஒரு அனுகூலமாக எடுத்துக் கொண்டு குழைந்தான்.

“அந்த விவகாரத்தில போயிட்டுதுன்னா போயிட்டதுதான். குணப்படுத்த முடியாதாம்... பாவம் உங்க பாடு... ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க... வேலை வேற கிடைச்சிட்டுது... அவங்க, உங்களை என்ன பண்ண முடியும்? குணப்படுத்த முடியாத கேஸை விட்டுடுறதுதான், பெட்டர்...”

சங்கரி, சங்காரம் செய்யப் போகிறவள் போல் அவனைப் பார்த்தாள். விசை கொண்ட வெடிகுண்டாய் வெடிப்பைக் காட்டாமல், இயல்பாகப் பேசுவதுபோல் பேசினாள்.

“முடியுமுன்னு சொல்றாங்களே...?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/81&oldid=1837357" இலிருந்து மீள்விக்கப்பட்டது