92
ஒத்தை வீடு
அவனுக்கும் ஊற்றிக் கொடுத்தாள். மெல்ல மெல்ல அவள் இரண்டுபட்டாள் கண்கள் தனியாய் கழன்றன. பிறகு தலையோடு சேர்ந்து சுழன்றன. அவன் சுழன்றான்... அந்த அறையே சுழன்றது... அவள் காளியாய் எழுந்தாள். குதியாய்க் குதித்தாள்... அவன் தோளைப் பற்றித் தூக்கியபடியே... கத்தினாள்...
“ஏன்யா... தெரியாமத்தான் கேக்கேன்... நீ ஆம்பளதானா...? இந்நேரம் அந்தக் கஸ்மாலமாயிருந்தா, என்னமா உருட்டியிருப்பான்... கதவைச் சாத்தாதேன்னு போக்கு காட்டுறியே... எனக்கா தெரியாது... நீ நெசமாவே ஆம்பளைன்னா... வாய்யா பார்க்கலாம்... வாய்யா...”
கங்கா, மல்லாக்க விழுந்தாள். சேலையை அவிழ்த்துப் போட்டாள். தலையைத் தூக்கித் தூக்கி இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி “ஒனக்கு நெசமாங்காட்டியும் தில்லு இருந்தா, வாய்யா... வாய்யா...” என்று அபிநயம் காட்டி குரலிட்டாள்.
போதைக்குள் மூழ்கியிருந்த மனோகருக்கு, உடனடியாய் போதை தெளிந்தது. சத்தம் போட்டவளின் வாயை கைகளால் பொத்தினான். அவள் கடித்த வலி பொறுக்காமல், கட்டிலில் கிடந்த பனியனை பந்து போலாக்கி, அவள் வாய்க்குள் திணித்தான். அவள், அவனை ஒரே தள்ளாய்த் தள்ளிவிட்டு எழுந்தாள். வார்த்தைகள் அம்புகளாகின குரல் அதிர்வேட்டானது.
“ஒன்னையே நம்புற என்னோட வேலையப் பற்றி யோசித்தியா... இன்னாச்சு ஒன் கம்பெனி... பொல்லாத கம்பெனி... போவட்டும்... ஆபீஸ்லயாவது பெர்மனென்டு ஆக்கினியா... ஆமாம்... தெரியாமத்தான் கேக்கேன்... நீ பொம்பளப் பொறுக்கி ஆயிட்டியாமே ஆபீஸ்ல ஒரு கிளார்க்குப் பொண்ணு வனஜா... செருப்பைத் தூக்கிக் காட்டினாளாமே... நான் இருக்கேன்... ஒன் பொண்டாட்டி இருக்காள். இந்த ரெண்டையும் சமாளிச்சாலே ஒனக்குப் பெரிசு... இன்னா மன்ஷன்யா நீ... பொட்டையில்லைன்னா இப்பவே வாய்யா... ஒன்னால நம்ம ஆபீஸே நாறுதுய்யா... என்னையும் ஒன்னையும் அந்தக் கிருஷ்ணன் பய ஏடாகூடமாப் பேசுறான்யா... தாங்க முடியலைய்யா... என்னால தாங்க முடியலைய்யா... எனிக்குப் பழி பாவத்தைக் கொடுத்திட்டியே... என்ன கைவிட்டிடாதேய்யா... என்னக் காப்பாத்தைய்யா.... ஏமாத்திடாதேய்யா... ஏமாத்துவியா? மவனே... ஏமாத்தின என்ன நடக்கும் தெரியுமா?”
கங்கா, படுக்கையிலிருந்து எழுவதும் விழுவதுமாகச் சுழன்றாள். பாவாடை ஜாக்கட்டில் ஒரு சினிமாப் பாட்டைப் பாடினாள். அவன் முதுகில் இரண்டு சாத்துச் சாத்தி, தாவி ஆடினாள் அவன் கையை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்... அழுதாள். அந்த அறையே குலுங்கும்படி ஒப்பாரி போட்டாள்.