பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

போட்டிக்கு வந்த காற்றண்ணன்

கதிரவனும் காற்றண்ணனும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. உலகத்தில் இரண்டு வல்லவர்கள் சந்தித்தால், அவர்களுக்குள் என்ன போட்டி ஏற்படும்? யார் வல்லவர் என்பதைத் தவிர வேறு எதற்காக அவர்கள் மோதிக் கொள்ளப் போகிறார்கள்.

"நான் தான் வல்லவன்!" என்றான் காற்றண்ணன்.

"இல்லை. நான் தான் வல்லவன்!" என்றான் கதிரவன்.

"மெய்ப்பிக்கிறாயா?" என்றான் காற்றண்ணன்.

"முதலில் நீ வல்லவன் என்பதைக் காட்டு. பிறகு நான் என் வல்லமையைக் காட்டுகிறேன்" என்றான் கதிரவன். "சரி அதோ, பூமியில் பார்! தெருவில் கைத்தடி ஊன்றி நடந்து செல்லுகிறானே கிழவன், அவனிடம் நம் வல்லமையைக் காட்டலாம்" என்றான் காற்றண்ணன்.

"போயும் போயும் தள்ளாடி நடக்கும் கிழவனிடமா நம் கைவரிசையைக் காட்ட வேண்டும்?" என்று நகைத்தான் கதிரவன்.