பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒடுங்கி நின்று...

117



"தலைவரே, இந்தப் பொண்ணு சொன்னத பாத்தியரா?"

"இன்னும் பாக்கலங்க. நாளைக்குப் பாத்துடுறேன்."

"உடனே பாத்துடணும். இப்படி இருக்கது தப்பு. பூச்சி கிருமி வரும். கிருமி வந்தா ஜுரம் வரும். ஜூரம் வந்தா தப்பு. நம்ம அரசாங்கம் அதனாலதான் சுத்துப்புறத்த சுகாதாரமா வைக்கச் சொல்லுது. இதுக்காக பல லட்சம் ரூபாய் பட்ஜெட்ல ஒதுக்கி இருக்காங்க."

உலகம்மைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"ஐயா வந்து ஒரு நட பாத்திடுங்களேன்."

பஞ்சாயத்துத் தலைவர் கமிஷனரைப் பேச விடாமல் பேசினார்.

"நான்தான் நாளக்கி வந்து பாக்கேன்னு சொல்லியிருக்கேன." கமிஷனர். தலைவருக்குத் தலையாட்டினார். பிறகு இருவரும், இன்ன பிறரும், யூனியன் ஜீப்பில் ஏறி, மாரிமுத்து நாடார் வீட்டுக்குப் போனார்கள். அங்கே கோழிக்கறியோடு சாப்பாடு.

'நாளை வரும்' என்ற நம்பிக்கையோடு உலகம்மை வீட்டுக்குப் போனாள்.

'நாளை' வந்தது. பஞ்சாயத்துத் தலைவர் வரவில்லை . மறுநாளும் வரவில்லை . மறுவாரமும் வரவில்லை.

உலகம்மை, அவரைப் பார்க்க நடையாய் நடந்தாள். ஒருநாள் வயக்காட்டு வேலைக்குக்கூட போகாமல், காத்துக் கிடந்தாள். வெள்ளைச்சாமியும், ராமசாமியும் இளக்காரமாகச் சிரித்துக் கொண்டே. தலைவர் வீட்டு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, உலகம்மை உருவத்தை ஒடுக்கிக்கொண்டு, வெளியே நின்று கொண்டிருந்தாள்.

காலையில் போன அவளுக்கு மாலையில் 'தரிசனம்' கிடைத்தது. வெளியே போய்விட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்த தலைவர், வீட்டுக் குள்ளிருந்து எட்டிப் பார்த்தார். உலகம்மை, ஒரு கும்பிடு போட்டுக் கொண்டாள்.

"வந்து பாக்கேன்னு சொன்னியரு, வரலிய மச்சான்."

தலைவர் எகிறினார்:

"சொன்னா சொன்னபடி வரணுமா? ஒன் வேலைக்காரனா நான்?"