பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"வேலைக்காரர் இல்ல. எனக்குஞ் சேத்துத் தலைவரு."

"கிண்டல் பண்றியா?"

"கிண்டல் பண்ணல மச்சான். என்னால தாங்க முடியல. வந்து பாத்தாத் தெரியும்."

உலகம்மை அவளே வெட்கப்படும் அளவிற்குக் கேவிக்கேவி அழுதாள். உலகத்துப் பாவ மல மூட்டைகள், அந்த நிர்மலத் தலையில் வந்து அழுத்தும் சுமை தாங்க மாட்டாது. அதை இறக்கும் வழியும் தெரியாது. கலங்கிப்போன குளம் போல, உள்ளக்குளம் கண்ணணைகளை உடைத்துக்கொண்டு, அருவிபோல் பொங்கியது. அரசியலில் அனுபவப்பட்டு, பல 'அழுகைகளைப் பார்த்த தலைவருக்கு. அவள் அழுகை ஆச்சரியத்தை அளிக்கவில்லை . அவரே, இப்படி அழுதிருக்கிறார். ஆகையால் அவள் அழஅழ, அவருக்குக் கோபம் கூடிக்கொண்டே வந்தது.

"இந்தா பாரு. விளக்கு வைக்கிற சமயத்துல நீலி மாதிரி அழாத."

"என்னால தாங்க முடியல மச்சான். ஒன்னுந் தெரிய மாட்டக்கு."

"சட்டாம்பட்டிக்குப் போவமட்டும் தெரிஞ்சுதோ?"

பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிவிட்டு, ஏன் சொன்னோம் என்பது மாதிரி உதட்டைக் கடித்தார். இதுவரை, அவளிடம் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற தோரணையில் பேசிய அவர், தன்னை அறியாமலே, மாரிமுத்து அண்ணாச்சியின் தொண்டன் போல் பேசியதற்காகச் சிறிது வெட்கப்பட்டார். அந்த வெட்கத்திற்குக் காரணமான உலகம்மை மீது அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது.

உலகம்மையும், அவர் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டாள். 'மச்சான்' என்று அவரை விளிக்காமல், ஆவேசம் வந்தவள்போல் ஒரு பிரஜை என்ற முறையில், அதே சமயம் பிரஜை என்றால் என்னவென்று தெரியாத அவளின் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை வெடிகளாயின. "பஞ்சாயத்துத் தலைவர! நீரும் மாரிமுத்து நாடார்கூட சேர்ந்துக்கிட்டியரா? நீரு எப்ப எனக்கும் தலைவர் என்கிறத மறந்துட்டீரோ அப்பவே நீரு எனக்குத் தலைவராயில்ல."

அவள் தொடர்ந்தாள் :