பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர் வயல் நட்டு...

7


உலகம்மை பேசாமலும், நாற்றை நடாமலும் சிறிது தயங்கினாள்.

“சும்மா சொல்லு.”

“அவன் பீடி ஏசெண்டு ராமசாமி இருக்காமுல்ல. அவன் பார்வ சரியில்ல. பீடி இலய குடுக்கிற சாக்குல ஒரு நாளு இலையோட சேத்துக் கையத் தேச்சான். தெரியாம பட்டிருக்குமுன்னு பேசாம இருந்தேன். இன்னொரு தடவை கணக்கப்பிள்ளகிட்ட பீடிய சோதித்தது மாதிரி என்ன இடிச்சான். நான் ஒதுங்கிக்கிட்டேன். பெறவும் லேசா இடிச்சான்.”

“நீ என்ன பண்ணுன?”

“அறிவிருக்காடான்னு கேட்டேன். ஒன் அக்கா தங்கச்சிய போயி இடியேன்னு கேட்டேன். அவன் மொகஞ்சின்னதாய் போச்சு. பக்கத்துல நின்னவளுக ஏங்கா, ஏஜெண்ட்ட இப்டிப் பேசுறன்னு கேட்டாளுகளே தவிர, அவன் செஞ்சத ஒரு வார்த்த தட்டிக் கேக்கல. இந்த முண்டைங்க கண்ணுல முழிக்கப்படாதுன்னு இங்க வந்துட்டேன்.”

ஏஜெண்ட் தன்னிடத்தில் தகாத முறையில் நடந்ததை விட, பக்கத்தில் இருந்த பெண்கள், அவனுக்கு ‘சப்போர்ட்’ செய்யும் தோரணையில் பேசியதையே பெரிதாக எடுத்துக் கொண்டவள்போல், உலகம்மை பேசாமல் நின்றாள். அவள் தோழி புஷ்பம் ஆதரவாய்ப் பேசினாள்.

“பீடிக்கட வந்தாலும் வந்துது. இவளுவ ஜினுக்கிறதும் மினுக்கிறதும், குலுக்கிறதும் சொல்லி முடியல. ஏஜென்ட்ட பார்த்து சிரிச்சி, இலய அதிகமா வாங்றது. கணக்கப் பிள்ளகிட்ட பல்லக் காட்டி கழிவண்டலு இல்லாம செய்றது. பீடி ஒட்டுறவனப் பார்த்து சிரிச்சி,சே... சே... விடு பேச்ச.”

“அதுக்கில்ல புஷ்பம், ஒரு வார்த்த தட்டித்தான் கேக்கல. சும்மாவாவது இருக்கலாமுல்ல?”

ஒரு கிழவி இடைமறித்தாள்.

“விடு களுதய, அவன சப்போட்டா பேசுனா பீடிய கழிக்க மாட்டான். பணத்தை ஒடனே குடுத்திடுவான். ஒங்கிட்ட என்ன இருக்கு குடுக்க? உலகமே மோசமா போயிட்டு. நாமுல்லாம் ஒன்ன மாதிரி இருக்கையில...”

“நீ ஒன் பிலாக்கணத்த நிறுத்து பாட்டி, ஒலகம்மா! நீ அவன அங்கயே செருப்ப வச்சி அடிச்சிருக்கணும்."