பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189



22. உலகம்மை நடந்தாள்...

நாலைந்து நாட்கள் கடந்தன.

மாயாண்டிக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்துவிட்டன. அவர் உடம்பு எரிக்கப்பட்ட இடத்தில் நான்கு சதுரஅடிப் பரப்பிற்கு ஒரு மணல்மேடை வைத்து, அதைச் சுற்றி ஒரடி உயரச்சுவரை எழுப்பினார்கள். மணல்மேட்டின் ஒரத்தில் ஒரு சாதாரண லிங்கத்தின் உயரத்திற்கு ஒரு கல்லை நட்டார்கள். அதன் அருகில் எருக்கிலைச் செடிகள் நடப்பட்டன. அருணாசலத்திற்கே, காப்புக் கட்டுவதுமுதல் அதைக் களைவது வரை எல்லாச் சடங்குகளும் செய்யப்பட்டன.

உலகம்மை. அருணாசலத்தின் வீட்டிலேயே தங்கியிருந்தாள். அது அவளுடைய வீட்டைவிட வசதியான வீடு. ரேடியோகூட இருந்தது. சேரி மக்களின் ஆறுதலில், சின்னப்பிள்ளைகளின் விளையாட்டில், தன் துக்கத்தைக் கரைத்துக் கொண்டிருந்தாள். வேலைக்குப் போக வேண்டிய தருணம் வந்துவிட்டதையும் உணர்ந்தாள். எத்தனை நாளைக்குத்தான் அய்யாவின் ‘சமாதியையே பார்த்துக்கொண்டு இருக்க முடியும் மாயாண்டி, மகளின் போக்குப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக ஊரில் அடிபட்ட ஒரு செய்தி வேறு. அவள் காதுக்கும் வந்தது.

ஒருநாள் அருணாசலம், சாவகாசமாகக் கேட்டான்.

“ஏம்மா, வீட்டுக்குப் போகலியா?”

உலகம்மைக்கு என்னவோ போலிருந்தது. முகங்கூடச் சுண்டிவிட்டது. விருந்தும் மருந்தும் மூணுநாளென்று சும்மாவா சொல்லுகிறார்கள்? அருணாசலத்தை - வெடவெடென்று ஒடிந்து போகப் போவது போலவும், 'அண்டங்காக்கா' நிறத்திலும் அதேசமயம் களையோடும் இருந்த உடம்புக்காரனையே சிறிது கூர்ந்து பார்த்துவிட்டுக் கேட்டாள்: