பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. ஒயிலாய் நடந்து...

மாரிமுத்து நாடாரும், உலகம்மையும் மடையின் கற்சுவர் வழியாக, மெள்ள நடந்தார்கள். ஓடையை அவர்களால் என்ன, யாராலும் தாண்ட முடியாது. பாசி படிந்த சுவரை அடிமேல் அடிவைத்துக் கடந்தபோது, சின்னப் பையன்கள் மதகுகளில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சிப்பூ போல பல்லாண்டுகளுக்குப் பின்னர் குள வெள்ளம், அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பாட்டியிருக்க வேண்டும். ஊரே அங்கு நின்றது. ஓடைக்குத் தென் பகுதியில் இருந்த சேரியில் முட்டளவிற்கு நீர் புகுந்து விட்டதால், சேரிப் பையன்கள், அதையே குளமாக நினைத்துக்கொண்டு விளையாடினார்கள்.

ஊரின் மேற்கு முனையில் இருந்த ‘பிள்ளைமார் குடி’ வழியாக இருவரும் நடந்தார்கள். காவல் கடவுள்போல முருகன் கோவில் கம்பீரமாக நின்றது. தோரணமலையில் இருக்கும் பால முருகனைத் தரிசிப்பதற்காக வந்த அகஸ்தியர் மலையேற முடியாமல், பிள்ளைமார் தெருப்பக்கம் உள்ள மடத்தில் தங்கியதாகவும், தோரணமலை முருகன் மனமிரங்கி, தந்தையின் நண்பரைப் பார்க்க இந்த இடத்தில் எழுந்தருளினான் என்பதும் ஐதீகம். இந்த எடத்தத் தாண்டி முருகன் ஆசாரிக் குடிக்குள்ளேயோ, நாடார் குடிக்குள்ளேயோ போகல - என்பது பிள்ளைமார்கள் வாதம். இந்த வாதம் முன்பு பகிரங்கமாகவும், இப்போது ரகசியமாகவும் நடந்து வருகிறது.

ஆலயமணி அடித்தது. ஊர்க்கணக்குப்பிள்ளை சிவசண்முகம், காதைப் பிடித்துக்கொண்டு ‘சரவணபவ, சரவணபவ’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர், “வாரும் நாடாரே, வாரும் நாடாரே” என்றார். நாடார், அவசர அவசரமாகக் கையை மேல்நோக்கி எடுத்துவிட்டு, நழுவிப் பார்த்தார். உலகம்மை அந்தத் தெய்வச்சிலையையே உற்றுப் பார்த்தாள். உதிரமாடசாமியை உணர்ச்சி பூர்வமாகக் கும்பிட்டுப் பழகியவள். இப்போது முருகன்சிலையை அறிவு பூர்வமாகக் கும்பிட்டாள்.

நழுவப்போன நாடாரை பிள்ளை விடவில்லை.

“நம்ம சொள்ளமாடன் வயல குளம் அழிச்சிட்டு. தாசில்தார் நாளைக்கு வாராரு. நீரும் சொல்லி நஷ்ட ஈடு கேக்கணும்.”

“செஞ்சா போச்சி, வரட்டுமா?”