பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சதியினைப் புரிந்து...

31


நடத்து. இல்லன்னா ஒன் மவள வச்சி நடத்து. பெரிய மனுஷன் பேசுற பேச்சாய்யா, இது?”

பலவேச நாடாரின் உடம்பெல்லாம் ஆடியது: ஒரு பொம்பிள. அதுவும் அவர் வீட்டு மனையில வீடுகட்டி பொளப்பு நடத்துற பனையேறிப் பய மவா, நீ நான்னு பேசிட்டா. உலகம்மையின் முடியைப் பிடித்து, கைக்குள் வைத்துக் கொண்டு, பிடறியில் போடலாமா என்பவர் போல் லேசாகக் கையைத் தூக்கினார். உலகம்மையும் அதை எதிர்பார்த்தவள் போல், சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியை எடுத்து, அதிலிருந்த சேற்றைத் துடைப்பவள்போல், ‘போக்குக்’ காட்டினாள். பலவேசமும் புரிந்து கொண்டார். ஆம்பிள ஆயிரம் அடிச்சாலும் தெரியாது. ஒரு பொம்பிள ஒரு அடி அடிச்சிட்டா போதும், மதிப்பே அவுட்டாகிவிடும். இப்போது, அவர் வார்த்தைகளில் அஹிம்சை குடிகொண்டது.

“ஒரு குடும்பத்த கலச்சிட்ட பரவால்ல, நல்லா இருந்துட்டுப் போ. ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் மவனுக்குக் கட்டி வச்சி அந்தப் பொண்ண காப்பாத்தலாமுன்னு நெனச்சேன். நீ கெடுத்திட்ட நீன்னு நெனச்சிக்கிட்டு இருக்கற மாப்பிள்ள அவளப் பாத்ததும் என்னபாடு படப்போறானோ எப்டில்லாமோ கெனவு கண்டிருப்பான். அவன் கனவுல நீ மண்ணள்ளிப் போட்டுட்ட. அது மட்டுமா? சரோசாவப் பிடிக்கலன்னு விரட்டியடிக்கப் போறான். அவா இங்க வந்து ஊர்ல நாலுபேரு நாலுவிதமாப் பேசும்படியா அலக்கழியப் போறா. கடைசில தூக்குப்போட்டுச் சாவத்தான் போறா. ஒண்ணுல ஒண்ணு மாப்பிள்ள சாவான். அல்லன்னா என் மச்சினன் மவா சாவா, நீ மகராசியா வாழு. கடவுள் இருக்கான், கவனிச்சுக்குவான். மாயாண்டி அண்ணே, என்னோட ஒன் மவா இவ்ளவு பேசியும் நீ ஒரு வார்த்த தட்டிப்பேசல. போவட்டும். எனக்கு இந்த இடம் வேணும். மாட்டுத் தொழு கட்டப்போறேன். நீ இன்னும் ஒரு வாரத்துல வேற இடத்தப் பாத்துக்க. இல்லன்னா, வீட்டத் தரமட்டமா பண்ணிடுவேன். உரசிப்பார்க்க ஆசையா இருந்தா, உரசிப்பாரு.”

பலவேச நாடார் போய்விட்டார். இதுவரை, எந்தப் பெண்ணும் அவரை அவமரியாதையாகப் பேசியதில்லை. என்னமாய்ப் பேசி விட்டாள் வெளில தெரிஞ்சா வெக்கம். அடிச்சா, திருப்பியடிப்பா போலுருக்கே அந்த முண்டய என்னவாவது பண்ணனும். என்ன பண்ணலாம்?’

உலகம்மை வாயடைத்துப் போனாள். பலவேச நாடார் போய்விட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் போக மறுத்தன.