பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஒரு கோட்டுக்கு வெளியே ...


அகன்றபின், அந்த வெறுமையில்தான் அவள் அருமையை அறிந்தவன்போல், லோகு, அவளைக் கைதட்டிக் கூப்பிட்டான்.

“எனக்கு நேரமாவுது. எதுக்கு கூப்பிட்டியர்”

“ஒரு இளநி பறிச்சித் தாரேன். சாப்பிட்டுட்டுப் போ.”

“வாண்டாம்,”

“எனக்குத் தென்னமரம் ஏறத் தெரியும். பனை மரத்துல கூட ஏறுவேன். ஒரே செகண்ட். இளனி சாப்பிட்டுப்போ.”

அவளுக்குச் சிரிப்புக்கூட வந்தது.

“கல்யாணமாவட்டும். சரோசாக்கா, நீங்க, நான் மூணு பேருமா தோட்டத்துக்கு வந்து தேங்காய் சாப்பிடலாம்.”

“அப்படின்னா ஒனக்கு இளநியே கிடைக்காது.”

“நீங்க சொல்றதப் பாத்தா...”

“நான், நீதான் எனக்கு வரப்போறவள்னு சந்தோஷமா நெனச்சேன். மூன்று நாளாய்த் தூங்கக்கூட இல்ல. ஒன் முகத்தத்தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியாமக் கிடந்தேன். நீ என்னடான்னா என் கண்ணத் திறந்துட்ட. ஆனால் கண்ணுதான் திறந்திருக்கே தவிர பார்வைதான் தெரியல.”

“நீங்க பேசுறதப் பாத்தா...”

“ஒன்ன என்னோட மெட்ராசுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். மெரீனாவுல சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கணும். பாம்புப் பண்ணையப் பாக்கணும். மிருகக் காட்சிசாலைக்குப் போய்ப் பொறிகடலைய வாங்கிக் குடுத்திட்டு, அத நீ குரங்குக்குட்டிக்கிட்ட போடணும். அது சாப்பிடுகிற சந்தோஷத்துல நீசந்தோஷப்படுறத நான் பார்க்கணுமுன்னு நெனச்சேன். ஆனா...”

உலகம்மை நாணத்தால் ஒருகணம் தலைகுனிந்து கொண்டாள். பிறகு அப்படித் தலைகுனிந்ததற்குத் தலைகுனிந்தவள் போல் அடித்துப் பேசினாள் :

“நீங்க என்னவெல்லாமோ பேசுறிய. எனக்கு ஒண்னும் நீங்க நெனக்கிறது மாதிரி ஆசை கிடையாது. விரலுக்குத்தக்க வீக்கமுன்னு தெரிஞ்சவா நான்.”