பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஒரு கோட்டுக்கு வெளியே ...


இன்னொருத்தி இடைமறித்தாள்:

“யார்ல தேவடியா? இந்த இருபது வயசுலயும் ஒருத்தர் ஒரு வார்த்த பேசாதபடி நடக்கறவா அவா. இவள் தேவடியாளாம். தேவடியாங்றிய, ஒன் தங்கச்சி கதை தெரியுமால அவள் மேலத்தெரு சுந்தரம்பய, ஒன் வீட்டுக்கு வந்து ஒன்னையே சிகரெட்டுவாங்கப்போகச்சொல்லிட்டு ஒன் தங்கச்சிய கட்டிப்பிடிச்சான். அவ தேவடியாளா? இவா தேவடியாளா? எச்சி சிகரெட்டுக்கு ஆசப்பட்டு சொந்த தங்கச்சிய கூட்டிக் குடுக்கிற பயலுக்கு வாய் வேறயால? இவ்வளவு பேசுறியே, ஒன் அக்கா எப்படின்னு ஒனக்குத் தெரியுமால?”

“விட்டுத் தள்ளுக்கா.”

“சும்மா இரு அலமு. நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். பிராந்துப்பயமவன் முழுத்த பொம்புளப்புள்ளயப் பாத்து வாய்க்கு வந்தபடி பேசுறான். எல, மாரியம்மா சத்தியமா சொல்லுறேன். உலகம்மையோட பாவம் ஒன்ன விடாதுல. நீ புழுத்துத்தான் சாகப்போறல, ஒம்மைய மாதிரி.”

“ஏழா, எம்மையப் பேகனின்னா ஒரே வெட்டா வெட்டி கிணத்துக்குள்ள ஆத்துப்புவேன்.”

இப்போது, மற்றொருத்தி சாடினாள்:

“ஏமுழா, கிறுக்குப்பய மவன்கிட்ட பேச்ச வளக்கிறிய மம்பெட்டிக் கனயவச்சி சாத்தலாம் வாங்க. ஏல பிராந்தா! நீ ஆம்புளன்னா அங்கேயே நில்லுல. ஒன்மேல சாணிய கரச்சி ஊத்தாட்டி சொல்லு.”

சில கிழவிகள் தடுத்தும் கேளாமல், பெண்கள், அவனை நோக்கி முன்னேறினார்கள். ஓடுவதா அல்லது சாடுவதா என்று தெரியாமல் வெள்ளைச்சாமி திண்டாடினான். “ஏல வெள்ளய்யா, உலகம்மா மோசம் பண்ணிட்டா. பனையேறிப்பய மவள வாய்க்கு வந்தபடி பேசி விரட்டுல” என்று பெரியய்யா சொன்னதை அமல் செய்ய வந்ததால் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்தவன் போல், அவன் தவித்துக் கொண்டிருந்தபோது, விஷயத்தின் முதல் அத்தியாயத்தை அவன் ‘லெவலில்’ முடிக்க நினைத்த மாரிமுத்து நாடார், பிறகு ஒருவேளை விபரீதமாகிவிடும் என்று நினைத்து மனைவி பேச்சியை அனுப்பி வைத்தார்.

அவள் வருவதற்கு ஒரு நிமிடம் தாமதம் ஏற்பட்டிருந்தால், வெள்ளைச்சாமி பொம்பிளைகளிடம் அடிபட்டிருப்பான். “முறுத்த