பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஒரு சத்தியத்தின் அழுகை

அதன் பட்டத்து மகிஷியும், இதர வைப்புக்களும் அதன் அருகில் போய் உட்காருவதற்காக, மேலே போகத் தொடங்கின. ஆனால் கண்ணாளனின் தீர்க்கமான பார்வை வேறு எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டு, அவை இருந்த இடத்திலேயே மீண்டும் அமர்ந்தன.

எல்லாக் குரங்குகளும் தலைமைக் குரங்கைப் பெருமிதத்துடன் பார்த்தன. அது, சாதாரணக் குரங்கை விடச் சற்றுப் பெரியது. 'குரங்குப் புத்தி அதிகமாக இல்லாததுபோல் எப்போதும் கம்பீரமாக உட்காரக் கூடியது. தலையில், புலித்தோல் நிறத்தில் அடர்ந்திருந்த, பட்டினும் மெல்லிய முடிக்கற்றை கிரீடம் போலத் தோன்றியது. அது, காலை மடக்கி வைத்திருந்த விதம், சிம்மாசனம் போலவும், கையைக் குவித்து வைத்திருந்த லாவகம், செங்கோல் போலவும் தோன்றின.

குரங்குகள், மெல்ல மெல்லப் பயத்தின் பிடிமானத்திலிருந்து விடுபட்டவைபோல், தங்களை உய்வித்த தலைமைக் குரங்கிடம், பின்புறமாய்ப் போய் வாலைத் துக்கின. அதுதான், குரங்கினம் தலைமைக்குச் செய்யும் அஞ்சலி. தலைமைக் குரங்கு பற்றற்ற யோகி போல், பிரஜை . குரங்குகளின் வாழ்த்தையும், வணக்கத்தையும், தேவையான அளவுக்குக் குறைவாக அங்கீகரிப்பதுபோல் தலையாட்டியது. எல்லாக் குரங்குகளும் வாலைத் தூக்கியபடி பின்புறமாய் நடந்து அஞ்சலி செய்தபோது வாளாவிருந்த ஒரு தடிக் குரங்கு, பின்னர் இதர குரங்குகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, வேண்டா வெறுப்பாகத் தன் வாலைத் தூக்க வேண்டிய அளவுக்குத் தூக்காமல், பின்னால் நகர வேண்டிய அளவுக்கு நகராமல், கடனே என்று அஞ்சலி செய்வதை, தலைமைக் குரங்கு கவனிக்கத் தவறவில்லை. முதலில் அதற்குச் சினம் பொங்கியது. அதைக் கெளவிக் கடித்து, கூட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாமா என்று கூட நினைத்தது. பின்னர், முன்னைய தலைமைக் குரங்கின் தளபதிபோல் விளங்கிய அது, 'இவ்வளவாவது செய்கிறதே என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டது.

குரங்குக் கூட்டம், தலைமைக் குரங்குக்கு, அன்று அளவுக்கு மீறி அஞ்சலி செய்ததில் ஒர் அர்த்தமிருந்தது. இப்போது காத்ததுபோல் எப்போதும் காக்கவேண்டும் என்பது அதன் பொருள். சொல்லப் போனால், அவைகளுக்கு மொழிவளம் இருந்திருந்தால், மனிதனைப் போல், தலைமைக் குரங்கைப் போற்றி ஒரு கவியரங்கமே நடத்தியிருக்கும்.