பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

தமிழில் பெளத்தம், பெளத்தத்தில் தமிழ்


பாலிமொழியும் வடமொழியும் அறிந்தவராயினும் அயோத்திதாசர் பெளத்தக் கோட்பாடுகளைப் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களைக் கொண்டே விளக்குவதும் புத்தரது வரலாற்றையும் கூட அவற்றை வைத்தே மீட்டுருவாக்கம் செய்வதும் நோக்கற்பாலது. இதனை அவரே தெளிவுபடுத்தி அதற்கான காரணத்தையும் எடுத்துரைக்கிறார்.

பிறவியை ஜெயித்துத் தேவனாகும் பலனை விரும்புவோர் புத்தரையும் புத்தரது தன்மத்தையும் சிந்திக்க வேண்டியதே செயலாதலின் அவரது பிறப்பு வளர்ப்பின் சரித்திரத்தையும் அறமொழிகளாம் சத்திய தன்மத்தையும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது அவர் பிறந்து வளர்ந்து இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலைச் செப்பு, அறநெறி தீபம், அறநெறிச்சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நிகழ்காலத்திரங்கல், நிகண்டு, திவாகரம், பெருங்குறவஞ்சி, சிறுகுறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, மற்றுமுள்ள சமண முனிவர்களின் நூற்களைக் கொண்டும் புராதன பெளத்த விவேகிகள் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளைக் கொண்டும் அனுபவச் செயல்களைக் கொண்டும் ஆராய்வதாயின் சத்ய தன்மம் நன்கு விளங்கும். நாமும் அவைகளை ஆராய்ந்தே பூர்வத் தமிழ்