பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


“தெய்வம் இகழேல்” எனும் அடிக்குத் தேய்வகமாம் உள்ளொளி கண்டோரைத் தாழ்வு செய்யாதே என்று பொருள் உரைத்து மனிதருள் உயர்ந்தோரே தேவரென்றழைக்கப்படுவார் என்றும் அவர் புராணங்கள் கூறும் பொய்த் தேவர் அல்லர் என்றும் தாசர் தரும் விளக்கம் சிறப்புடையது.

பொய்வேதப் புலம்பலாலும் பொய் புராணக் கட்டுக் கதைகளாலும் ஆகாயத்தினின்று பூமியில் வந்து தோன்றினாரென்னும் பொய் தேவக் கதைகளையும் ஆகாயத்திலிருந்த தேவர் பெண் வயிற்றில் பிறந்தார் என்னும் பொய் தேவக் கதைகளையும் அவனைக் கொல்ல அவதரித்தான், இவனைக் கொல்ல அவதரித்தான் என்னும் பொய்த் தேவர்களையும் அந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் இந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் என்னும் பொய்த் தேவர்களையும் விசாரணைப் புருஷர் இழிவு கூறுவவதில் ஒர் இடுக்கணும் இல்லை, புகழ்ச்சி செய்வதால் ஓர் பிரயோசனமும் இல்லை.

மக்களினின்றும் தேவரெனத் தோன்றியவர்கள் பிறப்பு இறப்பு அற்று மறுபடியும் கருவில் வந்து தோன்றார்கள் என்பது சத்தியமாம் (அயோத்திதாசர் II 53).

“தையல் சொற்கேளேல்” என்பதற்குப் “பெண்களின் சொற்களைக் கேட்காதே” என்று பொருள் உரைக்காமல் “எதிரிகள் உன் உள்ளத்தைத் தைக்குமாறு கூறும் சொற்களுக்குச் செவி கொடாதே” என்று பொருள் தருவார்.

“பொருள்தனைப் போற்றி வாழ்” என்னும் அடியும் புதிய விளக்கம் பெறுகிறது. இங்குப் பொருள் என்பது மெய்ப் பொருளைக் குறிக்கும் என்பார் தாசர்.

தன்னைத்தான் உணரென்றும் தனக்குள்ள நற்செயல்களையும் துற்செயல்களையும் உணர்ந்து தனக்கொரு கேடும் வராது துற்செயல்களை அகற்றி நற்செயல்களைப் பெருக்கி சுகநிலையாம் உண்மைப் பொருள் உணர்ந்து நிற்றலே நித்திய வாழ்க்கைக்கு ஆதாரமாதலின் க்ஷணத்திற்கு க்ஷணம் அழிந்து கொண்டே போகும் பொய்ப் பொருளைப் போற்றாது நித்திய ஒழுக்கமாம் நீடுவாழ்க்கையைத் தரும் மெய்ப்பொருளைப் போற்றி வாழென்று கூறியுள்ளார்கள் (அயோத்திதாசர் II 67).

“ஆலயந் தொழுவது சாலவும் நன்று” என்னும் அடிக்கும் தாசர் புதுப்பொருள் உரைப்பார். கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடல் நன்றென்று கூறாமல் “முதல் தெய்வமாகக் காணும் தந்தை தாயாரை மனோவமைதி பெற வணங்குவது எக்காலும் சுகம்” என்பது அவர் விளக்கம்.