பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 169

நோக்கி அம்மே! சுகமோ வென்றார். அசோதரையோ நமது ஐயன் பாதத்தை இறுகப்பற்றி ஐயனே! உமது கருணா நோக்கத்தால் இம்மட்டும் சுகமே யென்றாள். அம்மே! யாதொரு துக்கமும் இல்லையோ வென்றார்.

ஐயே! உம்மைப் பிரிந்த துக்கம் ஒன்றேயன்றி வேறு துக்கம் யாதும் அறியேன் என்றாள்.

ததாகதர் சகலருக்கும் தோன்றி நமக்குத் தோன்றாமல் இருக்கின்றா ரேயென்று துக்கித்தாயா என்றேல் ததாகதர் தோற்றமே மறைந்து விட்டதென்று துக்கித்தாயா வென்றார்.

உலகெங்கும் சத்தியதருமமாம், அமுதத்தை ஊட்டிவரும் ஐயன் உடனுயிர் பொருந்தி வாழ்ந்த அடியாளுக்கு அப்பேரின்ப அமுதை ஊட்டாது பிரிந்து நின்ற குறையே பெருந்துக்கத்தில் ஆழ்த்தியதென்றாள்.

அம்மே, நீவிர் தோன்றிக்கெடும் சிற்றின்பமாம் உலகவிச்சையை ஆசிக்கின்றாயா அன்றேல் அன்றும் கெடாமல் நித்தியமாம் பேரின்ப சதா சுகத்தையும் தெரிந்து கொள்ள ஆசிக்கின்றாயா என்றார்.

ஐயனே! சதாசுக நித்ய தன்மமாம் பேரின்பத்தையே தெரிந்து கொள்ள ஆசிக்கின்றேனென்றாள் (ஆதிவேதம் 140).

புத்தர் தமது தந்தைக்கு ஞானோபதேசம் செய்ததோடல்லாமல் மனைவிக்கும் மகனுக்கும் ஆறுதல் கூறி அறநெறியுரைத்துப் புத்ததன்மத்தில் சேரச் செய்கிறார் (ஆதிவேதம் 143) என்று தாசர் எழுதிச்செல்வது புத்தரின் கருணை உள்ளத்தை எடுத்துக்காட்டவே.

புத்தர் கலைகள் யாவற்றிலும் வல்லவர், கலைகள் பலவற்றின் தோற்றத்திற்கும் அவரே மூலம் என்று சுட்ட விரும்பும் தாசர் அதற்கேற்பச் சில காதைகளை அமைத்துக் கொள்கிறார். “பரத்துவாசருக்குப் பிணிக்குத் தக்க ஓடதிகள் போதித்த காதை”யில் தாசரின் மருத்துவ அறிவும் பளிச்சிடுகின்றது.மருத்துவத்தோடு புத்த தன்மமும் முறையாக இணைக்கப்படுகிறது.

பகவன் பரத்துவாசரை நோக்கி அன்பனே! உமக்குள் எழும் ரசோகுண, தமோகுண, சத்துவகுணம் என்னும் முக்குணத்திரய காம, வெகுளி, மயக்கங்களைக் காரணமாகக் கொண்டு எழுஉம் முக்குற்றங்களே வாத, பித்த, சிலேத்துமம் என்னும் மூவியாதி பீடமாகி வாதத்தால் ஆயிரத்து ஐந்தாறு வகைத் தோற்றங்களும் பித்தத்தால் ஆயிரத்து ஐந்நூற்றுநாற்பது வகைத் தோற்றங்களும் சிலேத்துமத்தால் ஆயிரத்து நானூற்று எட்டுவகைத் தோற்றங்களையும் உண்டு செய்து மக்களை மாளாத்துன்பத்திற்கு ஆளாக்கி மடித்து வருகின்றது. இத்தியாதி வியாதிகளின் தோற்றத்திற்கும் உபாதைக்கும் மக்கள் அவாக்களே காரணமாகும் (ஆதிவேதம் 147).