பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

இவ்விவ்விதமான குடும்பிகளால் அளிக்கப்பட்டனவென நினையாது நடக்கும் போதே மூன்று அடிதூரத்தில் தலை குனிந்து ஒரே பார்வையுடனும் ஒரே மனத்துடனும் சென்று சேர்ந்த பின் இவ்வுணவோ இரும்புத்துாளை ஒத்தது. இத்தகைய உணவோ பசியென்னும் நோய்க்கு மருந்து எனச் சிந்தித்துக் கொண்டும் புசித்தபின் ஒரு தனிமையான இடத்தில் சென்று தான் வருங்கால் மனம் எந்தெந்த விடத்தில் தவறிச் சென்றதோ, அவைகளைத் தியானத்தில் சிந்தித்து மறுபடியும் அவ்வகைத்தான பார்வையில் மனத்தைச் செலுத்தாதிருக்கும்படித் திருத்தியபின் தன்னில்தானே விழிப்புடன் தியான சமாதியில் இருப்பவர் எவரோ அவரையே முனி என்று அழைக்கலாம் (ஆதிவேதம் 207).

“தந்தையின் இரண்டாவது தரிசன காதை”யில் புத்தரும் அவர்தந்தையும் சந்தித்துப் பேசுவதை ஓர் அரிய நாடகக் காட்சியாக மாற்றுகிறார் தாசர். இத்தகைய சந்திப்பும் அசுவகோசரின் புத்த சரிதத்தில் இடம்பெறவில்லை.

சக்கரவர்த்தியாரும் தனக்குள்ளிருந்த வியாதியின் உபத்திரவம் நீங்கித் திருமகனை விழித்துப் பார்த்து அருமை மைந்தனேயென்று அழைக்கலாமோ வென்று சிந்தித்தான். மறுபடியும் தன்னைத் தேற்றிக்கொண்டு நாம் அவருக்குப் பிதாவாயினும் நமக்கு அவர் ஞானப்பிதாவாம் தாதாவாச்சுதே அவரை மைந்தன் என்று அழைக்கலாமோ வென்று மருண்டான். அவரது முக தேஜசைக் கண்டு ஆனந்தக்கண்ணிரைச் சொரிந்தான்.

சுத்தோதயச் சக்கரவர்த்தியின் இத்தியாதி எண்ணங்களின் உதயங்களையும் ஒடுக்கங்களையும் உள்ளுணர்ந்த ஒப்பிலாவப்பன் சுத்தோதயன் அருகில் சென்று ஐயனே யாது குறையென்று வினவினார் . . .

ஐயனே! தோற்றும் பொருட்கள் யாவும் கெடும் என்பதைத் தெள்ளறத் தெளிந்து கொண்டீரா இல்லையாவென்றார். தாதா தெரிந்து கொண்டேன், தெரிந்து கொண்டேன் என்று கூறினான்.

நீவிர் தெரிந்து கொண்டது திண்ணமாயின் உமது கோரிக்கையை மறந்து விடுவதே மகிழ்ச்சியாகும் என்று கூறியவுடன் கத்தோதயச் சக்கரவத்தியின் பேச்சும் மூச்சும் ஒடுங்கிப் பிரேதமானார் (ஆதிவேதம் 210-11).

இதை அடுத்து வரும் காட்சி வியப்புக்குரியது. இறந்த அரசனின் உடலைச் சுடலைக் கெடுத்துச் சென்று தகனம் செய்யும் போது அசோதரையும் இராகுலரும் சங்கத்தவர்களும் உறவினர்களும் சூழ்ந்து நின்றார்கள்.