பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


முடிவுகளுக்கு வர முடியும். புத்த சரிதம் இந்து சமயத்திற்கும் பிராமணர்களுக்கும் இதிகாசங்களுக்கும் வேதநெறிக்கும் புராணக் கதைகளுக்கும் மதிப்பும் மட்டற்ற மரியாதையையும் அளித்தே புத்தரது வரலாற்றைக் கூறிச் செல்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் புத்த சரிதம் எனும் பனுவல் (Text) எந்த அளவுக்கு நம்பகத்தன்மை (Authenticity) வாய்ந்ததென்பது புலப்படவில்லை. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள ஜான்ஸ்டன் முதல் பாதி மட்டுமே வடமொழி மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்றும் இரண்டாம் பாதியின் வடமொழி மூலம் அழிக்கப்பட்டுவிட்டதால் சீன, திபெத்திய மொழி பெயர்ப்புகள் என்று கிடைத்தவற்றிலிருந்து தாம் தமது மொழிபெயர்ப்பைக் கட்டமைத்துக் கொண்டதாகவும் கூறுவார். நூல் முழுவதற்கும் பாட பேதங்கள் இருப்பதையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டுவார். தம்மபதம் கூட மூல மொழியில் கிடைக்கவில்லை யென்பதையும் அதன் சீன மொழி பெயர்ப்பிலிருந்தே ஏனைய மொழி பெயர்ப்புகள் செய்யப்பட்டன வென்பதையும் நாம் இங்கு நினைவு கூரவேண்டும். பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிக்கப்பட்டதும் எஞ்சியவை இடைச்செருகல்களாலும் பாட வேறுபாடுகளாலும் சிதைக்கப்பட்டதும் மேலை ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இது கருதியே அயோத்திதாசர் வடமொழி மூலத்தைத் தவிர்த்துவிட்டுத் தமிழிலுள்ள பெளத்த, சமண சார்புடைய இலக்கியங்களைக் கொண்டும் பாலி மொழி நூல்களைக் கொண்டும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இந்து சமயமும் வேத உபநிடதங்களும் வேஷ பிராமணர்களால் புத்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு கற்பிதம் செய்து கொள்ளப்பட்டவையென்பது அவரது அழுத்தமான நம்பிக்கையும் முடிவும் ஆகும். தாம் எழுதும் நூலில் புத்தரின் வரலாற்றுச் செய்திகளைவிட புத்த சமயக் கொள்கைகளுக்கே அதிக இடமும் முக்கியத்துவமும் தருகிறார். புத்தரைத் தமிழருக்கு நெருக்கமானவராக, ஒரு தமிழ்க் காப்பியத் தலைவனாகக் கருதப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் இடங்களும் அவைகளின் பெயர்களும் சடங்குகளும் விழாக்களும் தொடக்கத்தில் புத்த சமயத் தொடர்புடையன என்பதை எடுத்துக் காட்ட முனைப்புடன் செயல்படுகிறார் தாசர். அவர் சொல்லுவனவற்றுள் சிலவற்றுக்குத் தக்க ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிலவற்றிற்குக் கிடைக்கவில்லையாயினும் இந்து சமயத்தார் என்று சொல்லிக் கொள்பவர்கள் பழந்தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்து, பழம் வரலாற்றைத் தம் நன்மை கருதி மாற்றியெழுதிக் கொண்டதைப் போன்று அவர்கள்